குஜராத் சோம்நாத் கோவிலில் சுயமரியாதை விழா கோலாகலம்: பிரமாண்ட ஊர்வலத்தில் பிரதமர் உற்சாகம்
குஜராத் சோம்நாத் கோவிலில் சுயமரியாதை விழா கோலாகலம்: பிரமாண்ட ஊர்வலத்தில் பிரதமர் உற்சாகம்
ADDED : ஜன 12, 2026 02:20 AM

சோம்நாத் : குஜராத் மாநிலத்தில், பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களில் முதன்மையானதாக விளங்கும் பழமையான சோம்நாத் கோவிலில், சுயமரியாதை விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, 108 குதிரைகள் புடைசூழ நடந்த பிரமாண்ட ஊர்வலத்தில், பிரதமர் நரேந்திர மோடி உற்சாகம் பொங்க கலந்து கொண்டார்.
''அன்னிய படையெடுப்புகளால் பல முறை தகர்க்கப்பட்ட போதும், அதை எல்லாம் தாங்கிக் கொண்டு, 1,000 ஆண்டுகளாக சோம்நாத் கோவில் ஓங்கி நிற்கிறது,'' என மோடி பெருமிதம் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் பிரபாஸ் பட்டன் பகுதியில், நாட்டில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்க திருத்தலங்களில், ஆதி ஜோதிர்லிங்க திருத்தலமாக விளங்கும் சோம்நாத் கோவில் உள்ளது. இந்தக் கோவில், 1026ம் ஆண்டில், கஜினி முகமது படையெடுப்பால் தாக்கி அழிக்கப்பட்டது. கோவில் வளங்களை, அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதன் பின், ஒவ்வொரு நுாற்றாண்டிலும், மீண்டும் கோவில் கட்டி எழுப்பப்படும் போதெல்லாம், படையெடுப்பாளர்களால் தகர்க்கப்பட்டு வந்தது.
அழிக்க முயற்சி
சுதந்திரத்திற்கு பின், நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேல் முயற்சியால், சோம்நாத் கோவில் மீண்டும் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டது. கஜினி முகமது தாக்குதல் நடத்தி, 1,000 ஆண்டுகளான பின்னரும், சோம்நாத் கோவில் மீண்டும் உயர்ந்து நிற்பதை கொண்டாடும் வகையில், 'சுயமரியாதை திருவிழா' பிரபாஸ் பட்டனில் கொண்டாடப்பட்டது.
திருவிழா நிறைவு நாளில் நேற்று பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
சோம்நாத், ஒரு கோவில் மட்டும் கிடையாது; இந்திய ஆன்மாவின் முழக்கம். 1,000 ஆண்டுகளுக்கு முன், நம் முன்னோர் தங்கள் உயிரை பணயம் வைத்து, தங்களின் நம்பிக்கைக்காகவும், சிவனுக்காகவும் அனைத்தையும் தியாகம் செய்தனர். சோமநாதரை அழிக்க, வரலாற்றில் ஒரு முறை அல்ல; பல முறை முயற்சிகள் நடந்தன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், 1026ல் சோமநாத் கோவிலை கஜினி முகமது தகர்த்தார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளுக்குள், சோமநாத் கோவில் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. கடந்த 12ம் நுாற்றாண்டில், ராஜா குமார பாலர், சோம்நாத் கோவிலை பிரமாண்டமாக சீரமைத்தார். 13ம் நுாற்றாண்டின் இறுதியில், அலாவுதீன் கில்ஜி மீண்டும் சோம்நாத் மீது படையெடுத்தார். பின், 14ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், ஜுனாகட் மன்னரால் இந்த கோவில் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. அதே நுாற்றாண்டின் இறுதியில், மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களால் தகர்க்கப்பட்டது.
அடையாளம்:
இப்படி பல நுாற்றாண்டுகளாக தகர்க்கப்பட்டு, மீண்டும் மீண்டும் சோமநாதர் கோவில் எழுப்பப்பட்டது. சிவன், இந்த முழு பிரபஞ்சத்திலும் நிறைந்திருக்கிறார். அதனால், அவரை அழிக்க முடியாது. சோமநாதரை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்த மதவெறி ஆக்கிரமிப்பாளர்கள், இன்று வரலாற்றின் சில பக்கங்களுக்குள் சுருங்கி விட்டனர்.
ஆனால், மிகப்பெரிய கடலின் கரையில், சோமநாத் கோவில் விண்ணை முட்டும் கொடியுடன் உயர்ந்து நிற்கிறது. ஒரு சில நாடுகள், சில நுாற்றாண்டு கால பழமையான பாரம்பரியத்தை, தங்கள் அடையாளமாக உலகிற்கு காட்டுகின்றன. அதே நேரத்தில் நம்மிடம், சோம்நாத் போன்ற ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான புனித தலங்கள் உள்ளன.
சுதந்திரத்திற்கு பின், அடிமை மனப்பான்மை கொண்டவர்கள், இந்த வரலாற்றை மறைக்க முயன்றனர். சோம்நாத் கோவிலுக்காக தியாகங்களை செய்தவர்களுக்கு, உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. மாறாக, ஆக்கிரமிப்பாளர்கள் வரலாற்றையே பேசினர். சோமநாதர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், வெறும் கொள்ளைக்காக மட்டுமே என்றிருந்தால், அவை முதல் முறை நடந்த கொள்ளையிலேயே நிறுத்தப்பட்டிருக்கும்.
சதி திட்டம்
சோமநாதரின் விக்ரகத்தை சேதப்படுத்தி, மக்களின் இறை நம்பிக்கையை உடைக்கப் பார்த்தனர். ஆனால், வரலாற்றில் அந்த உண்மை மறைக்கப்பட்டது. கொள்ளைக்காகவே சோம்நாத் கோவில் இடிக்கப்பட்டது என்று பாடப் புத்தகங்களில் எழுதினர். நாட்டின் சுதந்திரத்துக்கு பின், சோம்நாத் கோவிலை மறுகட்டமைக்க, சர்தார் வல்லபபாய் படேல் முயற்சி மேற்கொண்ட போது, அவரையும் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடந்தன. மறுகட்டமைப்பை எதிர்த்த சக்திகள், இன்றும் நம் நாட்டில் இருக்கின்றன.
இன்று வாள்களுக்கு பதிலாக, வேறு கீழ்த்தரமான முறைகள் வழியே, இந்தியாவுக்கு எதிராக சதிகள் தீட்டப்படுகின்றன. நாம் ஒற்றுமையாக இருந்து, நம்மை பிரிக்க சதி செய்யும் ஒவ்வொரு சக்தியையும் தோற்கடிக்க வேண்டும். வாளின் முனையில் இருந்து, ஒருபோதும் மனங்களை வெல்ல முடியாது. மற்றவர்களை அழித்து முன்னேற நினைக்கும் நாகரிகங்கள், காலப்போக்கில் தாமே மறைந்து விடுகின்றன.
அதனால் தான், இந்தியா இந்த உலகிற்கு, மற்றவர்களை தோற்கடித்து எப்படி வாழ வேண்டும் என்ற பாடம் சொல்லித் தராமல், மனங்களை வென்று எப்படி வாழ வேண்டும் என கற்றுத் தருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

