காரில் ஏற முயன்ற செல்லுார் ராஜு; ஏறக்கூடாது என தடுத்த பழனிசாமி?
காரில் ஏற முயன்ற செல்லுார் ராஜு; ஏறக்கூடாது என தடுத்த பழனிசாமி?
ADDED : ஆக 09, 2025 03:42 AM

மதுரை: மதுரை அருகே கீழ டிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வந்தபோது, அவரை வரவேற்று காரில் ஏற முயன்ற முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவை தடுத்த பழனிசாமி, 'வேறு காரில் வாங்க' என கூறி அவமதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகம் முழுதும் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கீழடி அகழ்வாராய்ச்சிக்கு வித்திட்டது அ.தி.மு.க., ஆட்சியில் தான். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் கீழடி விவகாரத்தை அரசியலாக்கி வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பழனிசாமி, ஜூலை இறுதி வாரத்தில் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டார். இதற்காக ஊர் நுழைவுவாயில் அருகே அவருக்கு, செல்லுார் ராஜு தலைமையில் அ.தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.
இதை தொடர்ந்து பழனிசாமி காரில் செல்லுார் ராஜு ஏற முயன்றார். உடனே பழனிசாமி, 'என் காரில் இடமில்லை; வேற காரில் வாங்க' என கூறியதை தொடர்ந்து, அசட்டு சிரிப்புடன் செல்லுார் ராஜு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
பின்னர் அருங்காட்சியகத்தில் பழனிசாமியுடனேயே வந்தார். செல்லுார் ராஜுவை, தன் காரில் ஏற வேண்டாம் எனச் சொல்லி பழனிசாமி தடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி, அது வைரலாகி வருகிறது.
இது குறித்து செல்லுார் ராஜு கூறியதாவது:
பழனிசாமி 'இசட்' பிரிவு பாதுகாப்பில் உள்ளார். அவரது காரில் முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் பின்புறம் அமர்ந்திருந்தனர்.
காரில், ஒரு 'சீட்' காலியாக இருந்ததை பார்த்தது ம், தலைவர் காரில் ஏறிக் கொள்ளலாம் என முயற்சித்தேன். ஆனால், அந்த 'சீட்' பாதுகாவலருக்குரியது என தெரிந்து, நான் தயங்கியபோது, 'வேறு காரில் வாங்க' என பழனிசாமி தெரிவித்தார். இதில், வேறு எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.