தொகுதி மாறும் முடிவில் செல்வப்பெருந்தகை, நயினார்
தொகுதி மாறும் முடிவில் செல்வப்பெருந்தகை, நயினார்
ADDED : ஜன 01, 2026 04:19 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும் தொகுதி மாறி போட்டியிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், கடந்த முறை தி.மு.க., - காங்., கூட்டணியில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகை, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., கூட்டணியின் பழனியை, 11,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மக்கள் அதிருப்தி
கடந்த நான்கரை ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தும், தொகுதியில் பெயர் சொல்லும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு, காங்கிரசார் மத்தியிலேயே உள்ளது.
அதேபோல, செல்வப்பெருந்தகை பெயரைச் சொல்லி, தொகுதி முழுதும் வியாபித்திருக்கும் தொழில் அதிபர்களிடம் நடக்கும் வசூலும், மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்த தொழில் அதிபர்களும் செல்வப் பெருந்தகை மீது கோபத்தில் இருப்பது, அவரை அலற வைத்திருப்பதாக, காங்கிரசார் கூறுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் மீண்டும் செல்வப்பெருந்தகை போட்டியிட்டால், அவரை தோற்கடிக்க தொழில் அதிபர்கள் பெரும் தொகை செலவு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதை அறிந்தே, மீண்டும் அங்கே போட்டியிட வேண்டாம் என, செல்வப்பெருந்தகை முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக காங்., தலைவர் ஆக்கப்பட்டது முதல், கூட்டணி தலைமையான தி.மு.க.,வினரோடு இணக்கமாக இருப்பதால் தி.மு.க.,வினர் செல்வப்பெருந்தகையை விரும்புகின்றனர்.
குறிப்பாக, அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, செல்வப்பெருந்தகையோடு நெருக்கமாக உள்ளார். தி.மு.க., தலைமையிடம் பேசி, எழும்பூர் தொகுதியை, செல்வப்பெருந்தகைக்கு 'ஓகே' செய் திருக்கிறார் சேகர்பாபு.
இதன் வாயிலாக, அமைச்சர் சேகர்பாபு, ஒரே கல்லில் இரு மாங்காய் அடிப்பதாக சொல்கின்றனர். எழும்பூர் தொகுதியின் தற்போதைய தி.மு.க., - எம்.எல்.ஏ., பரந்தாமனுக்கும் சேகர்பாபுவுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. அதனால், பரந்தாமனுக்கு இம்முறை தொகுதி கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதற்காக, செல்வப்பெருந்தகையை எழும்பூருக்கு கொண்டு வருகிறார் சேகர்பாபு.
அதேபோல, திருநெல்வேலி சட்டசபைத் தொகுதியில் செல்வாக்குடன் இருக்கும் தற்போதைய எம்.எல்.ஏ.,வான, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். ஆனால், சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில், தொகுதி அவருக்கு சாதகமாக இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக, தொகுதியில் அதிகம் உள்ள பட்டியலினத்தவர், நாடார் மற்றும் யாதவர்கள், பா.ஜ.,வுக்கும் நாகேந்திரனுக்கும் எதிரான மன நிலையில் உள்ளனர்.
சந்தேகம்
தன்னுடைய முக்குலத்தோர் இனத்தவர் மத்தியில், நாகேந்திரனுக்கு செல்வாக்கு இருந்தாலும், எதிரணியில் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்தால், தோல்வியே பரிசாகக் கிடைக்கும் என்பதே சர்வே முடிவு. இதனால் கலக்கம் அடைந்திருக்கும் நாகேந்திரன், இம்முறை விருதுநகர் மாவட்டம், சாத்துார் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார்.
அங்கே, தன்னுடைய இனத்தைச் சேர்ந்தோர் அதிகம் இருப்பதோடு, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு சாதகமான தொகுதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில், தொகுதி மாற நாகேந்திரன் விரும்புகிறார்.
ஆனால், அங்கும் வெற்றி வாய்ப்பு சந்தேகம் என, உறவுக்காரர்கள் சிலர் எச்சரிக்கை மணி அடிப்பதால், கடைசி நேரத்தில் அவர் தன் முடிவை மாற்றவும் வாய்ப்பு இருப்பதாக, பா.ஜ., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

