தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ 'அதிகாரத்தில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி

'அதிகாரத்தில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி

'அதிகாரத்தில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி


ADDED : ஜூலை 19, 2025 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 03:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி' என, கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது, தி.மு.க.வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்ற முழக்கத்தை, தி.மு.க., முன்வைத்தாலும், தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை.

பெரும்பான்மை


சென்னை மாகாணமாக இருந்தபோது, 1952ல் நடந்த, முதல் சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காதபோதும், கூட்டணி ஆட்சி அமையவில்லை.

பின், 1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய ஆறு சட்டசபை தேர்தல்களில், கூட்டணி அமைத்து வென்ற தி.மு.க., தனித்தே ஆட்சி அமைத்தது.

கடந்த 2006ல் தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், பா.ம.க., தயவுடன் ஆட்சி அமைத்தது. ஆனாலும், அக்கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவில்லை.

கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மட்டும், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு வென்று, தனிப்பெரும்பான்மை பெற்றது.

தமிழக தேர்தல் வரலாறு இப்படி இருக்க, இப்போது முதல் முறையாக, சட்டசபை தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே, 'கூட்டணி ஆட்சி; ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கையை முன்வைத்து, தி.மு.க.,வுக்கு, அதன் கூட்டணி கட்சிகள் நெருக்கடி தர துவங்கியுள்ளன.

கடந்த 6ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய, அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவர் ராஜேஷ் குமார், 'காங்கிரஸ் கட்சி எந்த பக்கம் போகிறதோ, அந்த கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.

'எனவே, காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தாக வேண்டும்' என, கூட்டணி தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பலரும், 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என, பேசத் துவங்கியுள்ளனர். இது, தி.மு.க.,வுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்திஉள்ளது.

கடந்த அக்டோபர், 27ம் தேதி, விழுப்புரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 'த.வெ.க., தனிப் பெரும்பான்மையுடன் வெல்லும். ஆனாலும், கூட்டணியில் எந்த கட்சிகளெல்லாம் இடம்பெறுகின்றனவோ, அக்கட்சிகளையும் ஆட்சியில் சேர்த்துக் கொள்வோம்' என்றார்.

அதன் பின்னரே, 'ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி' முழக்கங்கள் கேட்கத் துவங்கின. என்ன தான் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டாலும், தங்கள் கூட்டணியில் விஜய் இணைந்தால் தா ன்தி.மு.க., கூட்டணியை தேர்தலில் வீழ்த்த முடியும் என்பதால், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., தரப்பில் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், காங்கிரசுடன் தான் கூட்டணி அமைக்க, விஜய் விரும்புகிறார். இதற்காக, ராகுல் வரை பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது. இது தி.மு.க., தரப்புக்கும் தெளிவாக தெரிந்துள்ள நிலையில், கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மக்கள் ஏற்கவில்லை


இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்பதற்காகவே, ஆட்சியில் பங்கு வேண்டும் என, கூட்டணி கட்சிகள் பேசுகின்றன.

'கடந்த, 1980, 2011 சட்டசபை தேர்தல்களில், கூட்டணி ஆட்சிக்கு தயாராகும் வகையில் தான், அன்றைய தி.மு.க., தலைவர் கருணாநிதி தொகுதிப் பங்கீடு செய்தார். ஆனால், அதை மக்கள் ஏற்கவில்லை.

'கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தால், கூட்டணி ஆட்சி அமைவது சாத்தியமாகாது.

'விஜய், இதையெல்லாம் சொன்னாலாவது, கட்சிகள் தன்னை நோக்கி வரும் என எதிர்பார்த்து சொன்னார்; ஆனால், அவரை நம்பி யாரும் கூட்டணிக்கு செல்லத் தயாரில்லை' என்கின்றனர்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us