ஒற்றை இலக்க தொகுதிகள்: தி.மு.க., முடிவு; வி.சி., அதிர்ச்சி
ஒற்றை இலக்க தொகுதிகள்: தி.மு.க., முடிவு; வி.சி., அதிர்ச்சி
ADDED : மார் 03, 2026 05:07 AM

சென்னை: சட்டசபை தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் என, ஒற்றை இலக்கத்தில் வழங்க தயாராக இருப்பதாக தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சு நடத்தி வரும் பாலு தலைமையிலான தி.மு.க., குழுவினர், நேற்று வி.சி., கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர். வி.சி., சார்பாக, அதன் தலைவர் திருமாவளவனும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அப்போது, கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்டு, வி.சி., சார்பில் பட்டியல் கொடுக்கப்பட்டது. ஆனால், கடந்த 2021 தேர்தலை விட, இரண்டு 'சீட்' கூடுதலாக, எட்டு தொகுதிகள் தர தயாராக உள்ளதாக தி.மு.க., குழுவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, 'இம்முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் பெறுவோம் என, கட்சியினரிடம் கூறி வருகிறோம்; ஒற்றை இலக்கத்தில் பெற்றால், கட்சிக்குள் விமர்சனம் எழும். எனவே, 10 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும்' என, வி.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த தி.மு.க., குழுவினர், 'உங்களுக்காக ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க முடியவில்லை. 'தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கூட்டணியில் புதிதாக இணைந்திருப்பதால், அவர்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும்.
'மேலும், இந்த தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்பதால், அதிக தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., விரும்புகிறது. எனவே, விட்டுக் கொடுங்கள்' என கூறியுள்ளனர். இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

