மாணவர் சேர்க்கை சரிவு எதிரொலி: 70 தனியார் பாலிடெக்னிக்கிற்கு 'பூட்டு'
மாணவர் சேர்க்கை சரிவு எதிரொலி: 70 தனியார் பாலிடெக்னிக்கிற்கு 'பூட்டு'
UPDATED : செப் 03, 2026 05:45 AM
ADDED : செப் 03, 2026 12:30 AM

சென்னை: மாணவர் சேர்க்கை சரிவால், நடப்பு கல்வியாண்டு, 70 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள், தங்கள் கல்வி நிறுவனத்தை மூட, உயர்கல்வித் துறையிடம் அனுமதி கோரி உள்ளன.
தமிழக உயர்கல்வித் துறையின், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ், 55 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள்; 400க்கும் அதிகமான தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
சில ஆண்டுகளாக, டிப்ளமா படிப்பின் மீது, மாணவ, மாணவியரிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால், டிப்ளமா மாணவர் சேர்க்கை, கடும் சரிவை சந்தித்து வருகிறது.
நடப்பு கல்வியாண்டு, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மொத்தமுள்ள 22,600 இடங்களில், 12,000 இடங்கள்; தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1.30 லட்சம் இடங்களில், 24,000 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.
தொடர் மாணவர் சேர்க்கை சரிவால், நடப்பு கல்வியாண்டில், 70 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள், மாணவர் சேர்க்கையில் பங்கேற்கவில்லை. இக்கல்லுாரிகள், தங்களின் கல்வி நிறுவனத்தை மூட அனுமதி கோரி, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு கடிதம் எழுதி உள்ளன. அந்த கல்வி நிறுவனங்களிடமும், உயர்கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது.
இது குறித்து, உயர்கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: கல்வி நிறுவனத்தை மூடினால், அங்கு பணியாற்றும் விரிவுரையாளர்கள் நிலை, ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நிலை என்ன, அவர்களின் மாற்று வேலை வாய்ப்பு குறித்து, கல்வி நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், 70 கல்வி நிறுவனங்களில், மற்ற வகுப்புகளில் மாணவர்கள் படித்து வந்தால், அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும், கல்வி நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
