ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்க முன்பதிவு தேதி அறிவிப்பு
ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்க முன்பதிவு தேதி அறிவிப்பு
ADDED : செப் 19, 2024 03:48 AM

திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புரட்டாசி மாதம் பெருமாளை பக்தர்கள் தரிசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருமலை, திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஏராளமான சேவைகள் நடக்கின்றன. அவற்றில், டிசம்பர் மாத சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கு, 'எலக்ட்ரானிக் டிப்' வாயிலாக முன்பதிவு நேற்று துவங்கியது; வரும், 20ம் தேதி காலை, 10:00 மணி வரை நடக்கிறது.
ஆர்ஜித சேவைகளான கல்யாணம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு, 21ம் தேதி காலை 10:00 மணிக்கும்; வீட்டில் இருந்தபடியே, 'ஆன்-லைன்' வாயிலாக தரிசிக்கும் சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை.
ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான முன்பதிவு, 21ம் தேதி மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது.
அங்கப்பிரதக்ஷன டோக்கன் முன்பதிவு, வரும், 23ம் தேதி காலை, 10:00 மணிக்கும்; மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன முன்பதிவு, 23ம் தேதி மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது.
சிறப்பு தரிசன டிக்கெட், 300 ரூபாய்க்கான முன்பதிவு, 24ம் தேதி காலை 10:00 மணிக்கும்; திருமலை, திருப்பதி தங்கும் விடுதி முன் பதிவு, 24ம் தேதி மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது.
இவை அனைத்தும், டி.டி.டி., இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
திருமலை, திருப்பதி உள்ளூர் வாசிகளுக்கு புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, வரும் சனிக்கிழமைக்கான அங்கப்பிரதக்ஷன சேவை டிக்கெட்டுக்கான, 'எலக்ட்ரானிக் டிப்' பதிவுக்கான சேவை, இன்று காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை திறக்கப்படுகிறது.
- நமது நிருபர் -