தி.மு.க., மாவட்ட நிர்வாகிகளை மாற்ற ஸ்டாலின் முடிவு
தி.மு.க., மாவட்ட நிர்வாகிகளை மாற்ற ஸ்டாலின் முடிவு
ADDED : ஏப் 29, 2026 04:46 AM

- நமது நிருபர் -
சட்டசபை தேர்தலில், வேட்பாளர்களிடம் பணம் கேட்டு நெருக்கடி செய்த தி.மு.க., நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் பரிந்துரையால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே, இனிமேல் கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்யாமல், உட்கட்சி தேர்தல் நடத்தி, தகுதியானோரை தேர்வு செய்ய தி.மு.க., தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 234 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு விபரம், தேர்தல் பணி விபரம் குறித்து வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களிடம் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார்.
கொடைக்கானலில் அவர் ஓய்வு எடுத்தாலும், வெற்றி வாய்ப்பு குறித்து, வேட்பாளர்களிடம் நேரடியாக பேசி வருகிறார். அப்போது, அவரிடம் வேட்பாளர்கள் சிலர், கட்சி நிர்வாகிகள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததை குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மாவட்டச் செயலர்கள் பரிந்துரையால் நியமிக்கப்பட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலர்கள் மீது, வேட்பாளர்கள் பலர் புகார் கூறியுள்ளனர். மேலும், ஆட்சி காலத்தில் ஆதாயம் பெற்ற நிர்வாகிகள் பலர், தேர்தல் பணிகளில் சொதப்பிய தகவலும், முதல்வரின் கவனத்துக்கு சென்றுள்ளது.
இதனால், 'கட்சியில் இனிமேல் நியமனத்திற்கு இடம் கொடுக்காமல், ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி, அனைத்து மட்டங்களிலும் நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். 'அப்போது தான் கட்சியின் கட்டமைப்பு பலப்படும்' என, தனக்கு நெருக்கமானோரிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
