5 ஆண்டு ஆட்சியில் மனநிறைவு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும் ஸ்டாலின் பெருமிதம்
5 ஆண்டு ஆட்சியில் மனநிறைவு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும் ஸ்டாலின் பெருமிதம்
UPDATED : ஜன 25, 2026 04:55 AM
ADDED : ஜன 25, 2026 04:54 AM

சென்னை: ''எங்களின் உழைப்பையும் வளர்ச்சியையும் பார்த்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர். உறுதியாக சொல்கிறேன். நாங்கள் தான் மீண்டும் வருவோம்; வெல்வோம்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலுரை:
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆறாவது முறையாக வெற்றி பெற்றபோது, எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் கவலையும் இருந்தது; அதை, நான் மறைக்க விரும்பவில்லை.
இந்த பொறுப்பை எப்படி செய்யப் போகிறேன்; வாக்குறுதிகளை நிறை வேற்ற முடியுமா; மக்கள் விரும்பும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா என்ற கவலைகள் இருந்தன.
அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளாக தமிழகம் அனைத்து துறைகளிலும் மிக மோசமான பின்னடைவை சந்தித்து, மோசமான நிலையை அடைந்திருந்தது; அதை சரி செய்தாக வேண்டும்.
இடியாப்ப சிக்கல் மத்திய அரசு ஒத்துழைக்காத ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இந்த இரண்டு நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பது தான், என் கவலைக்கு மிக முக்கியமான காரணங்கள். இடியாப்ப சிக்கல் என்று சொல்வரே, அப்படியான சூழலில் தான் தி.மு.க., ஆட்சி அமைத்தது.
இப்போது, ஐந்து ஆண்டுகளை கடந்த நிலையில், நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்கு காரணம், மக்கள் மகிழ்ச்சி யாக இருப்பது தான். என் இலக்கில் வென்று விட்டேன். தி.மு.க., அரசின் சாதனைகளால், தமிழகம் தலைநிமிர்ந்து விட்டது. மக்கள் மனநிறைவு அடையக்கூடிய வகையில் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம்.
மற்ற மாநிலங்களை விட தமிழகம் அதிகம் வளர்ந்திருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் தமிழகத்தை அண்ணாந்து பார்க்கின்றன. அதற்கு காரணம், நம் திட்டங்கள்; நாம் செய்யும் சாதனைகள்.
நாங்கள் அமைக்கப்போகும், 'தி.மு.க., 2.0' ஆட்சியில், எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவுக்கு இருக்கும். ஆட்சி செய்யக்கூடிய ஐந்து ஆண்டுகளும் வரப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தை உணர்த்தும்.
இந்த அரசை பொருத்தவரை ஒரு சாதனை செய்தால், அதை மிஞ்சுவதாக இன்னொரு சாதனை வரும். அடுத்து அதை மிஞ்சுவதாக மற்றொரு சாதனை வரும். இப்படி சாதனைக்கு மேல் சாதனைகளை படைப்பது தான் தி.மு.க., அரசு. இந்த அரசு பொறுப்பேற்று, இன்றுடன் 1,724 நாட்கள் ஆகின்றன.
நலத்திட்ட உதவி கள் இந்த நாட்களில், 8,685 நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறேன். அவற்றில், 71 மாவட்ட விழாக்களில் பங்கேற்று, 44.4 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளேன்.
உங்களால் நிறைவேற்ற முடியாது என சவால் விடப்பட்ட வாக்குறுதிகளையும், நாங்கள் நிறைவேற்றி காட்டியிருக்கிறோம்.
அரசின் ஒவ்வொரு அணுவும் மக்களுக்காக செயல்படுவதால் தான், இது சாத்தியமாகியுள்ளது. இந்த ஐந்தாண்டு காலத்தில், எனக்கும், என் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு, தினந்தோறும் திட்டங்களை தீட்டி உழைத்திருக்கிறேன்; இன்னும் உழைக்க காத்திருக்கிறேன்.
இந்த உழைப்பையும், வளர்ச்சியையும் பார்த்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தி.மு.க., ஆட்சி தான் தொடர வேண்டும் என, தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர்.
எனக்கு, என்னை விட, தமிழக மக்கள் மேல் கூடுதலான நம்பிக்கை இருக்கிறது. உறுதியாக சொல்கிறேன்; நாங்கள் தான் மீண்டும் வருவோம். நாங்கள் தான் மீண்டும் மீண்டும் வருவோம்; வெல்வோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

