பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம்; பழனிசாமி மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்
பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம்; பழனிசாமி மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்
UPDATED : நவ 25, 2025 07:18 AM
ADDED : நவ 25, 2025 05:49 AM

சென்னை: 'தமிழக உரிமைகளை அடகு வைக்க மட்டும் தான் கூட்டணி என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நினைக்கிறாரா' என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
நீர்நிலைகள் நிறைந்து, விவசாயிகள் கடும் உழைப்பை செலுத்தி, நெடுவயல் நிறையக்கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து, காத்திருந்தோம். ஆனால், அதிக மழையால், நெல்மணிகள் ஈரமாயின.
உடனே, 'சாகுபடி காலத்திற்கு முன்னதாகவே, ஏன் அறுவடை செய்யவில்லை' என அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்த பழனிசாமி.
நெல்லின் ஈரப்பதத்தை, 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன்; அவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதோ, கழனியில் பாடுபட்ட விவசாயிகள் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்க துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?
போராடும் எங்களுக்கு துணை நிற்க, யாரிடம் அனுமதி பெற வேண்டும் என, பழனிசாமி காத்திருக்கிறார்? தமிழக மக்களின் சுயமரியாதையையும், தமிழக உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என, பழனிசாமி நினைக்கிறாரா?
மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த பழனிசாமி, ஒருமுறையாவது தலையை சற்று நிமிர்த்தி, நம் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்கச் சொல்வாரா?
விவசாயிகள் நலன் காக்க, தமிழகம் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான், இத்தனையும் கேட்கிறேன். ரத்தத்தை வியர்வையாக சிந்தி, விவசாயிகள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

