தன்னை பெரும்பான்மை ஹிந்து என ஸ்டாலின் நினைக்கிறார்: சீமான்
தன்னை பெரும்பான்மை ஹிந்து என ஸ்டாலின் நினைக்கிறார்: சீமான்
UPDATED : ஆக 29, 2025 04:08 AM
ADDED : ஆக 29, 2025 02:26 AM

சென்னை: “முதல்வர் ஸ்டாலின், தன்னை ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் என நினைப்பதாலும், அது பெரும்பான்மை மதம் என நினைப்பதாலும் தான், கிறிஸ்துவர், இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என கூறி வருகிறார்,” என்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
'கிறிஸ்துவர்களுடன் உரையாடுவோம்' என்ற நிகழ்ச்சி, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருச்சியில் நடந்தது. இதில், கிறிஸ்துவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, சீமான் பேசியதாவது:
கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களுக்கு என, தனி அரசியல் கிடையாது; ஹிந்துக்களுக்கு என, தனி பாதுகாப்பு அரசியல் கிடையாது; ஒரே அரசியல் தான், தமிழன் என்ற அரசியல் தான் அனைவருக்குமான அரசியலாக உள்ளது. எந்த கட்சியும், துவங்கும்போது பெரிய கட்சி இல்லை; சிறிய கட்சி தான் பெரிய கட்சியாக மாறும்.
தி.மு.க., மதவாத கட்சி முன்வைக்கும் நோக்கத்தை பாருங்கள்; அது சரியாக இருக்கிறதா என பாருங்கள். எண்ணிக்கையை பார்க்காமல், எண்ணத்தை பாருங்கள்.
அரசியல், பொருளாதாரம், ஊடக ஆதரவு இல்லாமல், ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், தோல்வியை மட்டுமே பார்த்து, 35.50 லட்சம் ஓட்டுகள் பெற்று, மூன்றாவது கட்சியாக வளர்ந்துள்ளோம்.
நீங்கள் அனைவரும், மதவாத எதிர்ப்பு கட்சி என புரிந்து வைத்திருக்கும் கருத்தே தவறு. தி.மு.க.,வே பெரிய மதவாத கட்சி என்பது அறியாமல், திரும்ப திரும்ப பேசி வருகிறீர்கள்.
நான் மாநாடு போடுகிறேன். 'மதங்களை விடு, மரங்களை நடு' என்கிறேன். ஆனால், என்னை தேடாமல், 'இஸ்லாம் நீ சிறுபான்மை; கிறிஸ்துவன் நீ சிறுபான்மை' என, கூறுபவர்களிடம் செல்கிறீர்கள்.
உங்களை சிறுபான்மை எனக்கூறும் முதல்வர் ஸ்டாலினிடம், என்றாவது ஒரு கிறிஸ்துவன் அல்லது இஸ்லாமியன் போய், 'நீங்கள் யார்' என கேட்டது உண்டா? ஸ்டாலினை பார்த்து, 'நீங்கள் சிறுபான்மையா, பெரும்பான்மையா' என கேட்க வேண்டும்.
ஸ்டாலின், தன்னை ஹிந்து என நினைத்துக் கொண்டு இருப்பதாலும், மதத்தால் பெரும்பான்மை என்ற எண்ணத்தில் இருப்பதாலும் தான், உங்களை சிறுபான்மை எனக் கூறி வருகிறார்.
ஹிந்து என்ற எண்ணத்தில் இருப்பவர், எப்படி மதவாதத்திற்கு எதிராக இருக்க முடியும்? மானுடனாய் பார்க்காமல், உங்களை மதத்தால் பார்க்கின்றனர். திராவிடம், பகுத்தறிவு, முற்போக்கு, சீர்திருத்தம் என கூறுகின்றனர்.
புரட்சி தீ இதுதான், உங்கள் சீர்திருத்தமா? கிறிஸ்துவர், இஸ்லாமியர்களுக்கு, தி.மு.க., செய்த ஒரு நன்மையை சொல்லுங்கள். நான் அரசியலை விட்டு செல்கிறேன். இந்த மக்களை அச்சப்படுத்தி, பயமுறுத்தி, கோழை ஆக்கியதை தவிர வேறு என்ன செய்து இருக்கின்றனர்?
நாட்டில், அரசியல் மறுமலர்ச்சியை இஸ்லாம் மக்கள் செய்திருக்க வேண்டும். 'அநீதிக்கு எதிரான புரட்சி தீயை பற்ற வைக்கவே, நான் இந்த பூமிக்கு வந்தேன்' என்றார் இயேசு. அவர் பற்ற வைத்ததை அணைத்தவர்கள் கிறிஸ்துவர்கள். அந்த தீயை துாக்கி பிடித்து ஓடிக்கொண்டு இருப்பவன், நான்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், உங்கள் கண் எதிரிலேயே எவ்வளவு மலைகளை அழித்து வருகின்றனர். உங்கள் ஜெபத்தால், தொழுகையால், வழிபாட்டால் அரை அங்குலமாவது, அந்த மலையை வளர்த்து காட்ட முடியுமா; அவர்கள் அழிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
இயற்கையை அழித்து வருபவர்களுக்கு ஓட்டு போட்டு விட்டு, தடுக்க நினைப்பவர்களை சாலையில் விட்டவர்கள் தானே நீங்கள்.
இவ்வாறு பேசினார்.