ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது பூஜ்ஜியமே! அடித்து சொல்கிறார் பழனிசாமி
ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது பூஜ்ஜியமே! அடித்து சொல்கிறார் பழனிசாமி
ADDED : பிப் 07, 2026 05:49 AM

சென்னை: ஐந்தாண்டு ஆட்சியில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அல்வா கொடுத்துள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: 'ஆனைக்கு அறம்' என்றால், 'குதிரைக்கு குர்ரம்' என்று சொல்வதையும், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 'ஸ்டிக்கர்' ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
உருட்டுக்கடை அல்வா
இப்போது அரசியல் ரீதியாக அ.தி.மு.க., செயல்பாடுகளையும், 'கார்பன் காப்பி' அடிக்கத் துவங்கியிருப்பது, விலா நோக சிரிக்க வைக்கிறது. கடந்த 2021 தேர்தலில் ஸ்டாலின் அளித்த, 525க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை. இந்த உண்மையை, மக்களுக்கு நாள்தோறும் சொல்லி வருகிறோம்.
கவர்ச்சிகரமாக பல பெயர்களை வைத்து, மக்களை ஏமாற்றும் தி.மு.க., அரசின் செயலை விளக்கும் வகையில், கடந்த ஆண்டு சட்டசபையில், 'தி.மு.க., வின் உருட்டுக்கடை அல்வா' ஒன்றை, தமிழக மக்களிடம் வழங்கினோம்.
மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ, இணக்கமாகப் பேசியோ, மக்களுக்குத் தேவையான எந்தவொரு நல்ல திட்டங்களையும் கொண்டு வர, தி.மு.க., அரசால் முடியவில்லை. அதனால், மத்திய அரசு கேட்டதைத் தரவில்லை என்று, வாய்ஜாலம் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, முறையாக திட்ட அறிக்கையை, மத்திய அரசிடம் தி.மு.க., அரசு சமர்ப்பிக்கவில்லை. தங்களின் இயலாமையை, தோல்வியை மறைக்க, மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்திற்கு தரவில்லை என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு, மக்களுக்கு நிஜமாக அல்வா கொடுக்கும் பம்மாத்து வேலையை தி.மு.க., அரசு அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில், 'மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; தி.மு.க-.,வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும்' என்றெல்லாம் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் ஸ்டாலின்.
பேஸ்மென்ட் வீக்
'பேஸ்மென்ட் வீக் - பில்டிங் ஸ்டிராங்' என்று, ஒரு படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைப் போல, தி.மு.க., ஆட்சியே ஆட்டம் கண்டு, இன்றோ, நாளையோ என்று ஊசலாடும் நிலையில், காலையில் எழுந்தவுடன், 'மேக்கப்' போட்டுக்கொண்டு, கண்ணாடி முன் நின்று, 'வெற்றி வெற்றி' என்று இம்சை அரசன் 23ம் புலிகேசி போல் ஸ்டாலின் கூக்குரல் இடுவதைக் கண்டு, தமிழக மக்கள் கைகொட்டி சிரிக்கின்றனர்.
கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில், ஒரு சில மக்களின் நாக்கில் தேன் தடவும் வேலையைத் தவிர, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, ஓட்டு கேட்க ஸ்டாலின் தயாரா?
அப்படி அவர் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல; வெறும் '0' தான்.என்று அதில் கூறப்பட்டுள்ளது.

