தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்

நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்

நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்


UPDATED : அக் 03, 2025 06:03 AM

ADDED : அக் 03, 2025 12:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2025 06:03 AM ADDED : அக் 03, 2025 12:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி

இன்று உலகின் மிகப்பெரிய தேசபக்தி இயக்கமாக ஆர்.எஸ்.எஸ்., தனது நுாற்றாண்டை கொண்டாடுகின்றது. 1925ம் ஆண்டு விஜயதசமி அன்று, நம்மால் டாக்டர்ஜி என்று அன்போடு அழைக்கப்படுகிற டாக்டர் ஹெட்கேவர் அவர்கள் நாகபுரியில் சில சிறுவர்களோடு ஆரம்பித்த இந்த இயக்கம், ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மகத்தான பேரியக்கமாக வளர்ந்து இருக்கிறது.

மாறாத தேசபக்தி, அயராத உழைப்பு, மனப்பூர்வமான ஈடுபாடு, எல்லாரையும் இணைக்க வேண்டும் என்ற பேரன்பு இத்தகைய மகத்தான மனப்பான்மையால் தான் ஆர்.எஸ்.எஸ்., இவ்வளவு பெரிய சிறந்த இயக்கமாக உரு வெடுத்து இருக்கிறது.

தனிமனித ஒழுக்கம் பேணிப் பாதுகாத்தால் தான் ஒரு உயர்ந்த நல்ல சமுதாயத்தை கட்டமைக்க முடியும் என்ற உயர்ந்த சிந்தனை, ஆர்.எஸ்.எஸ்.,-ஐ நூற்றாண்டைக் கடந்து வெற்றிகரமான இயக்கமாக உருவாக்கி இருக்கிறது.

மிகச்சிறந்த தனி மனிதர்களை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ்., உடைய தலையாய கடமை. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.,ன் அத்தனை துணை அமைப்புகளும் பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

அரசியல் துறையில் பாரதிய ஜனதா கட்சி இன்றைக்கு மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்து இருக்கிறது. அகில பாரதி வித்யார்த்தி பரிஷத், இந்தியாவின் மிகப்பெரிய மாணவ இயக்கமாக செயல்படுகிறது.

அதுபோல வனவாசி கல்யாண் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகிற சமூக சேவை மையமாக உருவெடுத்துள்ளது.

தொழிலாளர் மத்தியில் பாரதிய மஸ்துார் சங்கமும், பாரதிய கிசான் சங்கமும் நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்க அமைப்பாகவும் விவசாய அமைப்பாகவும் உள்ளன.

ஆன்மிக துறையில் விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி ஆகியன வீறுகொண்டு செயல்படுகின்ற இயக்கங்கள்.

வித்யா பாரதி நாடு முழுதும் எண்ணற்ற கல்வி நிலையங்களை உருவாக்கி மாணவர்களுக்கு தேசபக்தி உணர்வையும் சிறந்த ஒழுக்கத்தையும் உயர்ந்த கல்வியையும் போதிக்கிறது.

தேசத்தின் எந்த ஒரு பகுதியிலும் இயற்கை சீற்றம் ஏற்படுகிறது என்று சொன்னால் எதற்காகவும் காத்திருக்காமல் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்பவர்களாக ஆர்.எஸ்.எஸ்., இயக்க சகோதர - சகோதரியர் இருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்., சமூக சேவை ஆற்றும் போது பயன்பெறுபவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள், எந்த ஜாதியைச் சார்ந்தவர்கள், எந்த மொழியை பேசுகிறவர்கள் என்று பேதம் பார்ப்பதில்லை. இந்த பாரபட்சமற்ற சேவை மனப்பான்மைதான் ஆர்.எஸ்.எஸ்.,-ஐ சமூக நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள தேசிய இயக்கமாக கட்டமைத்திருக்கிறது.

டாக்டர்ஜி அவர்களுடைய தொலைநோக்கு சமூக பார்வையும் தேசபக்தி உணர்வும்தான் இந்த இயக்கத்தின் அடிநாதமாக அமைந்துள்ளன. அதனால் தான் எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையிலும் சமுதாயம் இந்த இயக்கத்தை மனதார ஏற்றுக் கொண்டிருக்கிறது.

விவேகானந்தர், ஒரு இயக்கத்தின் தத்துவங்களும் அதன் சிந்தனைகளும் நிலையானவையாக வரலாறு படைக்க வேண்டும் என்று சொன்னால் அந்த இயக்கம் நுாற்றாண்டுகளைக் கடந்தும் வெற்றிகரமான இயக்கமாக வலம் வர வேண்டும் என்று சொன்னார்.

ஆர்.எஸ்.எஸ்., காலத்தைக் கடந்து வெற்றி பெறுகிற, வரலாறு படைக்கின்ற இயக்கமாக தன்னை நிலைநிறுத்தி, விவேகானந்தர் கூற்றை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

பாரதம் உலகின் உன்னத தேசமாக, உலகிற்கு வழிகாட்டுகிற தேசமாக உலகின் குருவாக உயரும் நாள் தொலைவில் இல்லை. இந்த வேள்வியில் ஆர்.எஸ்.எஸ்.,சி-ன் பங்கு மகத்தானது. அது காலத்தைக் கடந்தும் வெற்றிகரமாக தொடரும். வாழ்க பாரதம்! வளர்க ஆர்.எஸ்.எஸ்.,சின் தேசப்பணி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us