அடுத்தடுத்து கட்சிகள் நெருக்கடி: அதிர்ச்சியில் ஆளும் தி.மு.க.,
அடுத்தடுத்து கட்சிகள் நெருக்கடி: அதிர்ச்சியில் ஆளும் தி.மு.க.,
ADDED : செப் 20, 2024 01:33 AM

தமிழகத்தில் அரசே மதுபானக் கடைகளை நடத்தி வரும் நிலையில், தி.மு.க., கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள், அக்., 2ல் கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
அதோடு இல்லாமல், அக்கட்சி தலைவர் திருமாவளவன், 'ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும்' என்றார். இதனால் ஏற்பட்ட நெருக்கடி நிலையை திருமாவளவனை அழைத்துப் பேசி முதல்வர் ஸ்டாலின் தற்காலிகமாக தீர்த்தார்.
திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு, தி.மு.க.,வின் மூத்த தலைவர்களான ஆர்.எஸ்.பாரதியும் டி.கே.எஸ்.இளங்கோவனும் கலந்து கொள்வர் என அறிவித்தார்.
இருந்தபோதும், ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை, தொடர்ந்து திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார்.
இப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அக்கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் 'தமிழகத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடக்கின்றன; நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு, மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, விரைவில் பாலியல் கொடுமைகளை எதிர்த்து, பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வலியுறுத்தி, மாநிலத்தில் ஒரு இயக்கத்தை நடத்த யோசித்துள்ளோம். விரைவில் தேதியை தீர்மானிக்க உள்ளோம்' என்றார்.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நடக்காத நாளே இல்லை என அவர் கூறியிருப்பது, அரசு மீதான கடுமையான குற்றச்சாட்டு.
மது ஒழிப்பு மாநாடு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வலியுறுத்தி இயக்கம் என, கூட்டணி கட்சிகள் வரிசை கட்டுவதால், தி.மு.க.,வுக்கு தலைவலி அதிகரித்திருக்கிறது.
கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான காங்கிரசும், தன் பங்குக்கு நேற்று செயற்குழுவைக் கூட்டி, 'உள்ளாட்சி தேர்தலில், 20 சதவீத இடங்கள் வேண்டும்; இல்லையேல் தனித்துப் போட்டி' என, திடீர் கொடி பிடித்துள்ளது.
கூட்டணி கட்சிகளை சமாளிப்பதே பெரும் சவாலாக இருக்கும் சூழலில், அரசுக்கு மேலும் நெருக்கடி தரும் வகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி மாநாடு நடத்த, பா.ம.க., ஆலோசித்து வரும் தகவலும் வெளியாகி உள்ளது.
மது ஒழிப்பை பா.ம.க., தான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. அதை வி.சி., எடுத்துக் கொண்டதால், தமிழக அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி மாநாடு நடத்த, பா.ம.க., ஆலோசிக்கிறது.
இதுகுறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கட்சி நடத்துவது எளிது; ஆனால், ஆட்சி நடத்துவது கஷ்டம். இதை தி.மு.க., நன்கு புரிந்து வைத்திருக்கிறது.
தி.மு.க., கூட்டணியில் பிளவு ஏற்படுத்தினால் தான், தங்களுக்கு ஏதும் வாய்ப்பு கிடைக்கும் என ஏங்கும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் சில, இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு பின்னணியில் இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. அதை கட்சித் தலைமையும் உணர்ந்திருக்கிறது.
நியாயமான கோரிக்கைகள் யாரிடம் இருந்து வந்தாலும், அதை தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தி.மு.க., தயாராகவே இருக்கிறது.
அந்த வகையில் தான், திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு தி.மு.க., சார்பில் மூத்த தலைவர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என, தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
கூட்டணியை அரவணைத்துச் செல்வதில் தி.மு.க., தலைவருக்கு இணையாக வேறு ஒருவரை பார்க்க முடியாது என்பது, கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். அதனால், தி.மு.க., கூட்டணியை விட்டு, கூட்டணி கட்சியினர் எங்கும் போக மாட்டார்கள். கூட்டணி வலுவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -