ஸ்டாலினிடம் தெரிவித்த பின்பே த.வெ.க.,வுக்கு ஆதரவு: திருமா
ஸ்டாலினிடம் தெரிவித்த பின்பே த.வெ.க.,வுக்கு ஆதரவு: திருமா
ADDED : மே 10, 2026 01:34 AM

சென்னை: ''தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்த பின்பே, த.வெ.க., ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தோம்,'' என, வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., இடம் பெற்று, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா இரண்டு இடங்களில் வென்றன.
இடதுசாரி கட்சிகளுடன் கடந்த ௨௦௧௬ல் மக்கள் நலக் கூட்டணி உருவான காலத்தில் இருந்தே, கொள்கை ரீதியாக இணைந்து பயணித்து வருகிறோம். நேற்று முன்தினம், இடதுசாரி கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு என்ற முடிவை எடுத்தன.
அதை தொடர்ந்து, நாங்கள் த.வெ.க.,வுக்கு ஆதரவு கடிதத்தை வழங்கி உள்ளோம். இந்த அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி, ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது; அதை தடுக்க வேண்டும்.
மேலும், 108 இடங்களில் வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க முடியாமல் த.வெ.க., திணறும் நிலையில், அக்கட்சிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.
வி.சி.க.,வின் நிலைப்பாடு, விஜய் முதல்வராக தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது. இடதுசாரிகள் போல வி.சி.க.,வும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்; வேறு எந்த நிபந்தனையும் இல்லை. தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் நீடிக்கிறோம்.
நாங்கள் எடுத்த முடிவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு தெரிவித்து, அவற்றை செயல்படுத்துகிறோம்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'உங்கள் நிலைப்பாட்டுக்கு வாழ்த்துகள்' என்றார். கவர்னர் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். குதிரை பேரம் நடப்பதற்கான சூழலை ஏற்படுத்தி விடக்கூடாது. எங்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருவதாக விஜய் சொன்னார்; அவரை வர வேண்டாம் என்று கூறி விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் வீரபாண்டியன் கூறுகையில், ''மக்கள் தீர்ப்புக்கு, கவர்னர் மதிப்பளிக்க வேண்டும். மக்களின் கொந்தளிப்பை, கவர்னர் உணர வேண்டிய சூழல் ஏற்படக்கூடும். மக்களின் உணர்வுகளுக்கு, கவர்னர் மதிப்பளிக்க வேண்டும்,'' என்றார்.
