அன்று ஆதரவு; இன்று எதிர்ப்பு: விஜய் பேச்சால் குழப்பத்தில் த.வெ.க.,
அன்று ஆதரவு; இன்று எதிர்ப்பு: விஜய் பேச்சால் குழப்பத்தில் த.வெ.க.,
ADDED : மார் 06, 2026 05:02 AM

- நமது நிருபர் -
கருணாநிதிக்கு சிலை, 'நீட்' தேர்வு விலக்கு போன்ற விவகாரத்தில், அன்று ஆதரவு தெரிவித்த விஜய், இப்போது எதிர்ப்பதால், த.வெ.க.,வினர் குழப்பமாகி உள்ளனர்.
த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க.,வில், விஜய் பேச்சுக்கு மட்டும்தான் மக்களிடம் வரவேற்பு கிடைக்கிறது. முன்பு, அவர் ஒரு நாள் பேசினால், தமிழக அரசியலில், ஒரு வாரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால், சமீபகாலமாக விஜயின் பேச்சு முரண்பாடாக இருப்பதால், தாக்கமும் குறைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் அதிகப்படியாக விமர்சனத்திற்கும் உள்ளாகிறது.
தஞ்சாவூரில் நடந்த த.வெ.க., கூட்டத்தில் தி.மு.க., குறித்து பேசுகையில், 'உங்க அப்பாவுக்கு வெண்கல சிலை வைக்க முயற்சி செய்தபோது, மக்களின் பணத்தில் யாருக்குப் புகழ் பாடப் பாக்குறீங்க என்று உச்ச நீதிமன்றம் கேட்டது' என விஜய் குறிப்பிட்டார்.
ஆனால், 2010ல், 'பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற பெயரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், 'சென்னை கலைஞர் நகரில் உங்களுக்கு சிலை வைக்க வேண்டும். அந்த சிலையை உங்களுடன் சேர்ந்து நானும் ரசிக்க வேண்டும்' என பேசி இருந்தார்.
அதேபோல், 2024ல் த.வெ.க., சார்பில் மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில், 'தமிழக அரசின் 'நீட்' விலக்கு தீர்மானத்துக்கு முழு மனதுடன் ஆதரவு அளிக்கிறேன்' என்றார் விஜய்.
ஆனால், தஞ்சாவூர் கூட்டத்தில், 'மாநில அரசால் முடியாது என தெரிந்தும், நீட்டை ஒழிப்போம் என மோசடி செய்கின்றனர்' என்று மாற்றி பேசுகிறார்.
கருணாநிதி சிலை குறித்தும், நீட் தேர்வு குறித்தும் விஜய் பேசிய பேச்சுகளை, தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் பரப்பி கேலி செய்கின்றனர்.
தி.மு.க., விஷயத்தில் எப்படி மாற்றி பேசுகிறாரோ, அதேபோல்தான் பா.ஜ., விஷயத்திலும் நடந்து கொள்கிறார். கட்சி துவங்கியதும் பா.ஜ.,வை கொள்கை எதிரி என்றவர், தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
பா.ஜ., எதிர்ப்பில் தீவிரமாக இருந்ததால்தான், தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் த.வெ.க.,வுடன் பேசின. ஆனால், சி.பி.ஐ., வழக்கு விசாரணைக்கு டில்லிக்கு சென்று வந்த பின், பா.ஜ., குறித்து விஜய் பேசுவதில்லை.
அதற்கு அவர், 'தமிழகத்தில் பா.ஜ., இல்லை; அவர்கள் குறித்து பேச வேண்டியதில்லை' என விளக்கமும் கொடுக்கிறார். இல்லாத கட்சியை, கொள்கை எதிரி என ஏன் பிரகடனப்படுத்த வேண்டும்?
இப்படி முன்பு ஒன்று பேசி, தற்போது அதற்கு நேர்மாறாக விஜய் பேசுவதால், த.வெ.க.,வினர் கடும் குழப்பத்தில் உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

