பரந்துார் விமான நிலைய திட்டத்தில், மறுகுடியமர்வுக்கு கணக்கெடுப்பு
பரந்துார் விமான நிலைய திட்டத்தில், மறுகுடியமர்வுக்கு கணக்கெடுப்பு
ADDED : அக் 13, 2024 03:10 AM

காஞ்சிபுரம்: பரந்துார் விமான நிலைய திட்டத்தில், ஐந்து கிராமங்களில், 1,005 குடும்பத்தினரை மறுகுடியமர்வு செய்ய கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்துார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 20 கிராமங்களில், 5,746 ஏக்கரில் அமைய உள்ளது. இதில், 3,774 ஏக்கர் பட்டா நிலமும், 1,972 ஏக்கர் அரசு நிலமாக உள்ளது. தனியார் பட்டா நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை, வருவாய் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தில் 810 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விமான நிலைய திட்டத்தால் குடிபெயரும் குடும்பங்களை மறு குடியமர்த்த கணக்கெடுப்பு பணிகளும் துவங்கி நடைபெறுகின்றன.
விமான நிலையம் அமைய உள்ள 20 கிராமங்களில், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் ஆகிய ஐந்து கிராமங்களில் உள்ள 1,005 வீடுகள் வசிப்போர், மறு குடியமர்வு செய்யப்பட உள்ளனர். மற்ற 15 கிராமங்களில் நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட உள்ளன.
வீடுகள் கையகப்படுத்த உள்ள கிராம மக்களிடம், வருவாய் துறையினர் அவர்களின் அடிப்படை விபரங்களை கணக்கெடுக்கின்றனர். அவர்களின் படிப்பு, ஜாதி, வயது, கல்வி, சொத்து விபரம், வேலை என அனைத்து வகையான விபரங்களையும் சேகரிக்கின்றனர்.
இந்த 1,005 குடும்பங்களுக்கு மாற்று இடங்களை வழங்க, சிறுவள்ளூர், மடப்புரம், மதுரமங்கலம், மகாதேவிமங்கலம் ஆகிய நான்கு கிராமங்களில், 238 ஏக்கர் நில எடுப்பு செய்யப்படுகிறது. அங்கு 1,005 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மறு குடியமர்வு செய்ய உள்ள வீடுகளில் வசிப்போருக்கு, 3 சென்ட் நிலம் அல்லது 5 சென்ட் நிலம் அரசு வழங்கும். இதுமட்டுமல்லாமல் வேலை, உதவித்தொகை போன்றவையும் வழங்கப்படும். இழப்பீடாக ஒரு பெரும் தொகையும் வழங்கப்படலாம்.
மறு குடியமர்வு செய்யவுள்ள இடத்தில், சாலை, குடிநீர், தபால் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், சமுதாய கூடம், பள்ளி, அங்கன்வாடி, கழிப்பறை, பேருந்து சேவை, ரேஷன் கடை, கால்நடை மருந்தகம், மருத்துவமனை என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.