ADDED : ஆக 20, 2025 03:53 AM

சேத்தியாத்தோப்பு: ரஷ்யாவில் மருத்துவம் படிக்க சென்ற சேத்தியாத்தோப்பு மாணவர், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை, கீழ்பாதி கிராமத்தைசேர்ந்தவர் சரவணன் மகன் கிஷோர், 23; கடந்த 2021ல் மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றார். கிஷோர் மூன்றாம் ஆண்டு படித்தபோது, பகுதி நேரமாக கூரியர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
கடந்த, 2023ல் தடை செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்ததாக அவரை ரஷ்யா போலீசார் கைது செய்தனர்.
இதையறிந்த பெற்றோர், மகனை ஜாமினில் எடுக்க கடலுார் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இந்திய துாதரகம் மூலமாக ரஷ்ய துாதரகத்தை அணுகினர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன், ரஷ்யா போலீசார், ராணுவ தளத்திற்கு அழைத்து சென்று பயிற்சி அளிப்பதாக கிஷோர் வீடியோ அனுப்பினார்.
மகனை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ராணுவ உடையில், கையில் துப்பாக்கியுடன் இருக்கும் வீடியோ, போட்டோவை கிஷோர், வேறொருவரின் மொபைல் போன் மூலமாக தன் பெற்றோரருக்கு அனுப்பியுள்ளார். இதனால், பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
'தங்கள் மகன் மீது பொய் வழக்கு பதிந்து ரஷ்யா போலீசார் கைது செய்துள்ளனர். மகனை மீட்க முடியாமல் தவிக்கிறோம். கிஷோரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததது கவலை அளிக்கிறது' என, பெற்றோர் தெரிவித்தனர்.