காவிரி நீர்திறப்பு குறைப்பு; தமிழகம் 'அடக்கி' வாசிப்பு
காவிரி நீர்திறப்பு குறைப்பு; தமிழகம் 'அடக்கி' வாசிப்பு
UPDATED : செப் 26, 2024 05:12 AM
ADDED : செப் 26, 2024 02:15 AM

சென்னை:செப்டம்பர் மாதத்திற்கான நீர் திறப்பை, கர்நாடகா குறைத்துள்ள நிலையில், தமிழக அரசு 'அடக்கி' வாசிக்கிறது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம், நீர் வழங்கும் தவணைக் காலம் துவங்கும்.
அதன்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி.,க்கு பதிலாக, 2.25 டி.எம்.சி., மட்டுமே, தமிழகத்திற்கு கிடைத்தது. ஜூலை முதல் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்தது.
இதையடுத்து, ஜூலையில் 31.5 டி.எம்.சி.,க்கு பதிலாக 96.5 டி.எம்.சி.,யும், ஆகஸ்ட் மாதம் 45.9 டி.எம்.சி.,க்கு பதிலாக, 78.3 டி.எம்.சி.யும் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது.
தற்போது தென்மேற்கு பருவ மழை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்திற்கான நீர் திறப்பையும், கர்நாடகா குறைத்துள்ளது.
நடப்பு செப்டம்பர் மாதம் 36.7 டி.எம்.சி., நீரை திறக்க வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அதில் 23ம் தேதி வரை, 28.1 டி.எம்.சி., நீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், 24.2 டி.எம்.சி., மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, 3.9 டி.எம்.சி., நீர் நிலுவை வைக்கப்பட்டு உள்ளது. மாதவாரியாக நீர் திறப்பை பின்பற்றாமல், வெள்ள காலங்களில் நீர் திறப்பை அதிகரிப்பதை, கர்நாடகா வழக்கமாகக் கொண்டு உள்ளது.
ஆனால், கர்நாடகா அரசின் நடவடிக்கையை கண்டுகொள்ளாமல், தமிழக அரசும், நீர்வளத் துறையும் அடக்கி வாசிக்கின்றன.