நாங்கள் மறியல் போராட்டம் நடத்தினால் தமிழகம் தாங்காது: ராமதாஸ் எச்சரிக்கை
நாங்கள் மறியல் போராட்டம் நடத்தினால் தமிழகம் தாங்காது: ராமதாஸ் எச்சரிக்கை
ADDED : ஆக 11, 2025 02:40 AM

மயிலாடுதுறை: 'வன்னியர் சமுதாயத்திற்கு, இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றக் கோரி, சாலை மறியல் போராட்டம் நடத்தினால் தமிழகம் தாங்காது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். வன்னியர் சங்கம் சார்பில், பூம்புகாரில் நேற்று மகளிர் மாநாடு நடந்தது.
இதில், ராமதாஸ் பேசியதாவது:
வன்னியர் சமுதாயத்திற்கு, 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க, ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த, உடனே முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
108 சமுதாயங்கள் தமிழகத்தில் உள்ள 320 சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கு, தங்களின் சமூக நிலை என்ன என்பது, ஜாதி வாரி கணக்கெடுப்பில் தெரிய வரும்.
அதை நிறைவேற்ற முதல்வர் ஏன் தயங்க வேண்டும். முதல்வருக்கு ஆலோசகராக இருப்போர், அதை அவருக்கு சொல்ல வேண்டும். மிக பிற்படுத்தப்பட்டோருக்கு, 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கருணாநிதி கொடுத்தார். இதனால், 108 சமுதாயங்கள் பயன் பெற்றன.
இப்போது தந்தையை மிஞ்சிய தனயனாக, ஜாதி வாரி கணக்கெடுப்பை ஏன் நடத்தக்கூடாது. அண்டை மாநிலங்கள் கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. முதல்வரும் அதை செய்து, சமூக சரித்திரத்தில் இடம் பெற வேண்டும்.
இட ஒதுக்கீட்டிற்காக, தமிழகம் அதிரும் அளவிற்கு, ஏழு நாட்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினோம்.
தற்போது, அதை விட பிரம்மாண்டமான போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். அப்படி ஒரு போராட்டம் நடத்தினால் தமிழகம் தாங்காது.
தமிழகத்தில், கஞ்சா, சாராயம் ஒழிய வேண்டும். அதற்காக உங்கள் பகுதிகளில் அதை விற்றால், பெண்கள் அனைவரும் திரண்டு போராட்டம் நடத்துங்கள். என்னை அழைத்தால், நானும் போராட்டத்தில் பங்கேற்பேன்.
சமூகத்தில் பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், இந்த இரண்டு தீமைகளும் ஒழிய வேண்டும்.
முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். என்னிடம், மூன்று மாதம் ஆட்சியை தாருங்கள். இல்லை, உங்களிடம் உள்ள, 10 அதிகாரிகளை என்னிடம் அனுப்புங்கள். நான் சொல்கிற ஆலோசனையை கேட்டு, அவர்கள் வாயிலாக, மேல் நடவடிக்கை எடுங்கள். இரண்டு தீமைகளையும், எளிதில் ஒழித்துவிடலாம்.
உங்களால் முடியவில்லை என்றால், நாங்கள் ஆட்சிக்கு வந்து, அதை செய்வோம். பெண்கள் எல்லா துறைகளிலும் முதல் இடத்திற்கு வருகின்றனர். ஆண்கள், பின்னால் தயங்கி தயங்கி நிற்கின்றனர். அதற்கு காரணம் சாராயமும் கஞ்சாவும் தான். போதை விஷயத்தில், போலீசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் தெருவில், போதைப் பொருளை யார் விற்றாலும், அவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படையுங்கள்.
வரும் சட்டசபை தேர்தலில், தொண்டர்கள் விருப்பத்தின் அடிப்படையில், வெற்றி கூட்டணி அமைப்பேன். யார் எது சொன்னாலும் காது கொடுத்து கேட்காதீர். நான் சொல்வதை மட்டும் கேளுங்கள். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
புறக்கணிப்பு வன்னியர் சங்கம் நடத்திய, மகளிர் மாநாட்டில், பா.ம.க., தலைவர் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை. ராமதாஸ் உடன், அவரது மனைவி சரஸ்வதி, மகள் ஸ்ரீ காந்திமதி பங்கேற்றனர். மாநாட்டின் முதல் தீர்மானத்தை, ஸ்ரீ காந்திமதி படித்தார். மாநாட்டில் அன்புமணி படம், பெயர் எதுவும் இடம்பெறவில்லை.
அன்புமணி புறக்கணிப்பு
வன்னியர் சங்கம் நடத்திய, மகளிர் மாநாட்டில், பா.ம.க., தலைவர் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை. ராமதாஸ் உடன், அவரது மனைவி சரஸ்வதி, மகள் ஸ்ரீ காந்திமதி பங்கேற்றனர். மாநாட்டின் முதல் தீர்மானத்தை, ஸ்ரீ காந்திமதி படித்தார். மாநாட்டில் அன்புமணி படம், பெயர் எதுவும் இடம்பெறவில்லை.