நெருக்கடி ஏற்படுத்திய தம்பிதுரை; பா.ஜ., - எம்.பி.,க்கள் அதிருப்தி
நெருக்கடி ஏற்படுத்திய தம்பிதுரை; பா.ஜ., - எம்.பி.,க்கள் அதிருப்தி
ADDED : டிச 03, 2025 05:54 AM

சென்னை: காற்று மாசு தொடர்பாக மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில், ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியது, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. பா.ஜ., கூட்டணி கட்சி எம்.பி.,யான தம்பிதுரை, நேற்று முன்தினம் ராஜ்யசபாவில் பேசும்போது, 'தலைநகர் டில்லி யில், கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
'குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. வீட்டுக்குள் இருந்தாலும், காற்று மாசிலிருந்து தப்பிக்க முடியவில்லை. கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்துகின்றனர். 'ஆனாலும், எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, காற்று மாசுபாட்டை தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
டில்லி காற்று மாசு குறித்து, எதிர்க்கட்சியினர், பா.ஜ., அரசை விமர்சித்து பேசினர். அதற்கு துணை போவதுபோல கூட்டணி கட்சியான அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதால், ஆளும் பா.ஜ., - எம்.பி.,க்கள் அதிருப்தி அடைந்தனர்.
கடந்த 2014 முதல் 2019 வரை, லோக்சபா துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, லோக்சபாவில் பேசும் போது, மத்திய பா.ஜ., அரசை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். 2019 தேர்தலுக்கு முன், அவரது பார்லிமென்ட் பேச்சுகள், பா.ஜ.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தின.
அதே வழிமுறையை இப்போதும் தம்பிதுரை பின்பற்றுவது பா.ஜ., மேலிடத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: டில்லியில் காற்று மாசு ஏற்படுவது, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மக்கள் தொகை நெருக்கம், தொழிற்சாலை பெருக்கம் என பல காரணங்கள் இருந்தாலும், அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவது தான் முக்கிய காரணமாக உள்ளது.
டில்லியில் பா.ஜ., அரசு இருப்பதால், காற்று மாசுபாட்டை பெரும் பிரச்னையாக, 'இண்டி' கூட்டணியினர் சித்தரிக்கின்றனர். அதற்கு ஆதரவாக தம்பிதுரை செயல்படுவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

