தேர்தல் வாக்குறுதி நுாறு சதவீதம் நிறைவேற்றப்படும்: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுதி
தேர்தல் வாக்குறுதி நுாறு சதவீதம் நிறைவேற்றப்படும்: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுதி
ADDED : ஜன 13, 2026 05:27 AM

மதுரை: 'தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆட்சி அமைந்ததும் வாக்குறுதிகள் நுாறு சதவீதம் நிறைவேற்றப்படும்' என அ.தி.மு.க, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுதி அளித்தது.
கட்சியின் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மண்டலம் வாரியாக சென்று பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறது. மதுரையில் நேற்று மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கான கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது. 55 சங்கங்கள் மனு அளித்தன. மதுரை மாவட்ட செயலாளர்கள் செல்லுார் ராஜூ, ராஜன் செல்லப்பா, உதயகுமார் வரவேற்று பேசினர். மதுரையில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: இங்கு பெறப்பட்ட கோரிக்கைகள் மக்களிடம் ஓட்டு வங்கிகளாக மாறும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., 525 வாக்குறுதிகளை தந்தது. அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தல் அறிக்கை வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக்கூடியதாக உள்ளது. ஆட்சி அமைந்ததும் வாக்குறுதிகள் நுாறு சதவீதம் நிறைவேற்றப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் குழுவைச் சேர்ந்த பொன்னையன், செம்மலை, ஜெயகுமார், சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, வைகைச்செல்வன் பங்கேற்றனர். தேனி மாவட்ட செயலாளர் ஜக்கையன், முறுக்கோடை ராமர், ஐ.டி., பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் சரவணன், எஸ்.எஸ். சரவணன், மகேந்திரன், மாணிக்கம், தமிழரசன் கலந்து கொண்டனர்.

