ADDED : மார் 09, 2026 05:58 AM

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:
டி.நாச்சிமுத்து,
போடிபட்டி, உடுமலை, திருப்பூர்.
நான் 36.5 ஆண்டுகள் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவன்.
* கடந்த 2022 மார்ச்சில், உடுமலை, எலையமுத்தூரில் விவசாய பூமி கிரயம் செய்தேன். செப்.,ல் பட்டாமாறுதலுக்கு எலையமுத்தூர் வி.ஏ.ஓ.,விடம் விண்ணப்பித்தேன். அவர், ரூ.3,000 லஞ்சம் பறித்த பின்பே, செய்து கொடுத்தார்.
* 2024ல் எலையமுத்தூர் தோட்டத்தில் புதிய வீடு கட்டி, அக்.,ல் குடியேறினோம். வீட்டின் மின் இணைப்பை வர்த்தக இணைப்பிலிருந்து வீட்டு இணைப்பாக மாற்ற, மின் கணக்கீட்டாளரிடம் மனு கொடுத்தோம். ரூ.2445 வேண்டும் என்றார்; ரூ.2,500 கொடுத்தோம். இரு நாட்களுக்குப் பின், கட்டண ரசீது ரூ.189 என, மொபைலில் குறுஞ்செய்தியாக வந்தது. இதில் லஞ்சம் ரூ.2311.
* உடுமலை நகரில் மகன் பெயரில், ஒன்னேகால் சென்ட் கடை விலைக்கு வாங்கினேன். கிரையம் பெற, உரிமைச்சான்றிதழுக்காக 2023, மார்ச்சில் நகர சர்வேயரை அணுகினேன். ரூ.2,500 லஞ்சமாக பறித்துக் கொண்டு உரிமைச் சான்றிதழ் வழங்கினார்.
* மேற்படி இடத்தை கிரையம் செய்த பின், பட்டமாறுதல் செய்ய, 2023 மே மாதம் மற்றொரு நகரசர்வேயரை அணுகினேன். அவர் ரூ.7,000 வாங்கிக் கொண்டு செய்து கொடுத்தார்.
* மேற்படி கடைக்கு வரி பெயர் மாற்றம் செய்ய, 2023 ஜூலையில், வார்டு பொறுப்பாளரை அணுகினேன். அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஒப்புக்கொண்ட பின் பெயர்மாற்றம் செய்து, ரூ.8,000க்கு ரசீது கொடுத்துவிட்டு, பணத்தை வாங்கிக் கொண்டார்.
* பூலாங்கிணறில், தந்தை பெயரில் உள்ள வீட்டை வாரிசுகள் பாகசாசனம் செய்தோம். பழைய பட்டாவை (1979ம் ஆண்டு பட்டா) புதிய பட்டா மாறுதல் செய்ய, பூலாங்கிணறு பெண் வி.ஏ.ஓ.,வை அணுகினேன். ரூ. 2,500 லஞ்சம் வாங்கிக் கொண்டு செய்து கொடுத்தார். 2025 ஜன.,யில் பாகசாசனம் முடித்தபின், எனது பாகத்துக்கான வீட்டுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிக் கொண்டு பட்டாமாறுதல் செய்து கொடுத்தார்.
* பூலாங்கிணறு ஊராட்சி அலுவலகத்தில் வீட்டுவரி பெயர்மாற்றம் செய்ய அணுகினோம். என்னிடம் பணம் வாங்கவில்லை. எனது மற்ற இரு சகோதரர்களிடம் ரூ.2,500 லஞ்சம் வாங்கிக் கொண்டனர்.
நேர்மையாளர்களும் உண்டு
பூலாங்கிணறு மின்வாரிய அலுவலகத்தில் பெயர் மாற்றத்துக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தேன். அதை நகல் வாங்கி சரிபார்த்துவிட்டு, பணம் எதுவும் வாங்காமல் பெயர் மாற்றம் செய்து கொடுத்தனர். எனது பணிக்காலத்தில் எதற்காகவும் ஒரு பைசாகூட தவறாக கை நீட்டிப் பெற்றதில்லை.
தொடரும்....
![]() |


