ADDED : நவ 27, 2024 04:07 AM

பார்லிமென்ட் மைய மண்டபத்தில் கடந்த, 75 ஆண்டுகளுக்கு முன் எந்த இடத்தில் வைத்து இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, அதே இடத்தில் நம் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் முகப்புரையை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வாசித்தார். உடன், துணை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உள்ளிட்டவர்கள் மட்டுமின்றி, இரு சபைகளின் எம்.பி.,க்களும் எழுந்து நின்று, அதை பின்தொடர்ந்து வாசித்து புகழாரம் சூட்டினர்.
விழா துவங்கும் முன், மைய மண்டபத்திற்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்க, உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து முன்வரிசையில் அமர்ந்ததும், பா.ஜ., எம்.பி.,க்கள் பலரும் ஓடோடி வந்து வணக்கம் வைத்தனர். அப்போது, பல வரிசைகளுக்கு பின்னால் சக தி.மு.க., எம்.பி.,க்களுடன் அமர்ந்திருந்த பெரம்பலுார் எம்.பி., அருண் நேரு, விறுவிறுவென எழுந்து வந்து, அமித் ஷாவுக்கு, வணக்கம் வைத்தார்.
என்ன நினைத்தரோ, சில இருக்கைகள் தாண்டி அமர்ந்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சென்று வணக்கம் போட்டார். இதை பார்த்த பலரும், 'டில்லியில் எதிர்காலம் உள்ள இளம் தி.மு.க., எம்.பி., இவர்தான்' என, கமென்ட் அடித்தனர்.
அதேபோல விழா முடிந்து, இல்லம் திரும்ப, தங்களது கார்களுக்காக எம்.பி.,க்கள் காத்திருந்தனர். அதில் தி.மு.க., மூத்த எம்.பி., பாலுவும் ஒருவர். அவரைப் போலவே காத்துக் கொண்டிருந்தவர் அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி. தம்பித்துரை. இவரது கார், சட்டென வந்துவிட்டது.
![]() |
- நமது டில்லி நிருபர் -


