UPDATED : செப் 10, 2025 07:55 AM
ADDED : செப் 10, 2025 07:51 AM

கீழடி
வரலாற்று தொடக்க காலம், சங்க காலம் வரையிலான தொடர்ச்சியை அறிய மிக முக்கியமான தொல்லியல் மேடாக கீழடி உள்ளது. வடக்கே, கங்கைச் சமவெளியில் மட்டும் அல்ல; தமிழகத்திலும் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகம் இருந்தது என்பதை நிரூபித்து, கீழடி அகழாய்வு பிரபலமாகி உள்ளது.
அதனால், 2024 - 25ல், 10ம் கட்டமாக, அகழாய்வு இயக்குநர் ரமேஷ் தலைமையில் அகழாய்வு நடந்துள்ளது. இந்த அகழாய்வு பருவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மட்டும் இந்த கட்டுரையில் விளக்குகிறோம்.
இந்த அகழாய்வில், மத்திய தொல்லியல் துறையின் முதல் இரண்டு கட்ட அகழாய்வின்போது வெளிப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி, முழுமையாக அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொல்லியல் மேட்டின் மேற்கு, தெற்கு மற்றும் மையப்பகுதிகளில், 13 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
அவற்றில்,
1. இயற்கை மண்ணடுக்குக்கும், மேல்மட்ட வாழ்விடத்துக்கும் இடையில், மிக தெளிவாக ஏழு முதல் எட்டு மண்ணடுக்குகள்
2. கீறல் குறியீடுகள், எழுத்துப் பொறிப்புகளுடன், 100க்கும் மேற்பட்ட பானை ஓடுகள்
3. கடினப்படுத்தி செப்பனிட்ட தரைதளங்கள்
4. பீப்பாய் வடிவ சுடுமண் குழாய்கள்
5. அதிகளவில் பெரிய தானிய சேமிப்புக் கலன்கள்
6. மழைநீர் வடியும் வகையில் பள்ளத்துடனும், பொருத்தும் வகையில் இரு முனைகளில் துளைகளுடனும் உள்ள கூரை ஓடுகள், செங்கல் கட்டுமானத்தின் மீது சரிந்து விழுந்த குவியல்
7. இரும்பு
8. பல விதமான பானை ஓடுகள்
9. மரத்துாண்கள் ஊன்றி வட்டமாகவும், செவ்வக வடிவிலும் குடில் அமைத்ததற்கான பள்ளங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு உள்ளன. 10ம் கட்டத்தில் மொத்தம் 700 தொல்பொருட்கள் கிடைத்து உள்ளன.
இங்கு சேகரிக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகள், தாவரப்படிவுகள், கொந்தகை இடுகாட்டு கலையங்கள், தாழிகளில் கிடைத்த உணவுப்படிவுகள் ஆகியவை பல்வேறு ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
டி.என்.ஏ., சோதனை
மண்டை ஓட்டின் மரபணுக்களை, மதுரை காமராஜர் பல்கலை, ஆய்வு செய்கிறது. அவற்றில், மரபணு எனும் டி.என்.ஏ., கிடைக்கும் பகுதி மிகவும் சிறியதாக இருப்பதால், பரிசோதனைக்கு மரபணுவை எடுப்பதில் சிரமம் இருப்பதாகவும், ஆய்வுகள் தொடர்ந்து நடப்பதாகவும் கூறப்படுகிறது.
![]() |
முடிவுகளின்படி, இங்கு, அதிகளவில் காளை, எருது, பசு, எருமை, ஆடுகள் அதிகளவில் இருந்துள்ளன. மான், காட்டுப்பன்றிகள் சிறிய எண்ணிக்கையில் இருந்துள்ளன
ஆடு, பன்றி, மான்களின் எலும்புகள் வெட்டப்பட்டு, வெந்த நிலையில் உள்ளதால், இவை உணவுக்கானவை என்பது உறுதியாகிறது
பாசிப்படிவுகள், தாவரங்களின் அடிப்படையில், இப்பகுதி, வறண்டும், உலர்ந்தும் நெடுங்காலம் இருந்துள்ளது.
இங்கு பல காலகட்டத்தைச் சேர்ந்த, சுடுமண் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் கிடைத்துள்ளன.
இங்கு கிடைத்த கரிமப்பொருட்களின் பகுப்பாய்வில், பொ.யு.மு.,
600 - 300 என்பது உறுதியாகி உள்ளது. இது, அசோகர் காலத்துக்கு முந்தையவை. கட்டடங்கள் தோன்றும் காலம்,
பொ.யு.மு., 300. இது, கங்கைச்சமவெளி காலம். மண்பாண்டங்களில், சுடுவதற்கு முன்பே குறியீடுகள், எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை வெவ்வேறு வடிவில் உள்ளன. எழுத்துகளில் பெயர்கள் உள்ளன. பரவலாக எழுத்துகள் தோன்றும் காலம் பொ.யு.மு., 600. வேறெங்கும் இல்லாத வகையில், இங்கு, 110 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடம் கிடைத்துள்ளதால், தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றிய பல தகவல்கள் கிடைக்கும்.
- மா.ரமேஷ், அகழாய்வு இயக்குநர்
அடுத்து...
இங்கு, அதிகளவில் குறியீடுகளும், துவக்ககால தமிழி எழுத்துகளும் கிடைத்துள்ளதால், தமிழி எழுத்துகளின் தோற்றம், வளர்ச்சி பற்றிய தொடர் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன
மண்பாண்டங்களில் மெல்லிய அளவில் படிந்துள்ள உணவு, தானியங்களையும் கட்டடங்களில் படிந்துள்ள எச்சங்களையும் பகுப்பாய்வு செய்து, அவற்றின் துல்லிய பயன்பாடு பற்றி அறிய திட்டமிடப்பட்டுள்ளது.


