கலெக்டர் வழங்கிய மொபைல் எண் தவறு; வாட்ச்மேன் பேசியதால் விவசாயிகள் அதிருப்தி
கலெக்டர் வழங்கிய மொபைல் எண் தவறு; வாட்ச்மேன் பேசியதால் விவசாயிகள் அதிருப்தி
ADDED : பிப் 05, 2026 05:13 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர், நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில், நேரடி நெல் கொள்முதலில் ஏற்படும் பிரச்னை குறித்து, புகார் அளிக்க கலெக்டர் மூலம் வழங்கிய மொபைல் எண் வாட்ச்மேன் அறைக்கானது என்பதை அறிந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, மூன்று லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், 511 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைகள், வெளி மாவட்ட நெல் விற்பனை, லஞ்சம் கேட்பது போன்ற புகார்களை தெரிவிக்க, நுகர்பொருள் வாணிப கழக மண்டல பொதுமேலாளர் மொபைல் எண் கொண்ட செய்திக்குறிப்பு விவசாயிகளுக்கு, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மூலம் வழங்கப்பட்டது.
கலெக்டர் கொடுத்த எண்களில் ஒன்றை, தஞ்சாவூரில் உள்ள விவசாயிகள் அழைத்த போது, வாட்ச்மேன் எடுத்து பேசியுள்ளார். மேலும், அந்த வாட்ச்மேன், 'வேறு ஒரு எண் தருகிறேன். பேசுங்கள் அல்லது நேரில் வாருங்கள்' என கூறியதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விவசாயிகள் கூறியதாவது: நுகர்பொருள் வாணிப கழகத்தில், நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகள் புகார் அளிக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட புகார் எண்ணில், விவசாயிகளுடன் பேச, ஒரு அலுவலரை நிரந்தரமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆனால், கலெக்டர் வழங்கிய மொபைல் எண்ணில் வாட்ச்மேன் எடுத்து பேசினால், விவசாயிகள் எங்களுக்கு எப்படி தீர்வு கிடைக்கும்? இவ்வாறு அவர்கள் கூறினர்.

