ADDED : மார் 18, 2024 11:30 PM

உலகின் மிகப் பெரிய தேர்தல் திருவிழாவுக்கான நாள் குறித்தாகிவிட்டது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. பிரசாரத்துக்கு தேர்தல் கமிஷன் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வீதி வீதியாக பிரசாரம், பேரணிகள், பொதுக் கூட்டங்கள் என கட்சிகள் பிரசாரத்தில் இறங்க உள்ளன. அதே நேரத்தில், இந்த தேர்தல் பிரசாரத்தின் பிரம்மாஸ்திரமாக இருக்கப் போவது, மொபைல்போன்.
98.6 கோடி பேர்
''இந்த தேர்தலில் போட்டி மற்றும் முடிவுகள் மொபைல்போன்கள் வாயிலாகவே நிகழும்,'' என்கிறார். பிரபல சைபர் சட்ட நிபுணர் பவன் தக்கல். இதற்கான காரணத்தையும் அவர் கூறுகிறார்.
இந்த தேர்தலில், 98.6 கோடி பேர் ஓட்டளிக்க உள்ளனர். அதே நேரத்தில், 2023 புள்ளி விபரங்களின்படி, நம் நாட்டில், 105 கோடி பேர் மொபைல் போன்கள் வாயிலாக இன்டர்நெட் வசதியைப் பெற்றுள்ளனர்.
அதன்படி பார்த்தால், கிட்டத்தட்ட ஒவ்வொரு வாக்காளரிடமும், இணைய வசதி உள்ள மொபைல்போன் ஒன்றாவது இருக்கலாம் என்கிறார் பவன் தக்கல்.
பா.ஜ., செய்தித் தொடர்பாளரும், அதன் தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான நலின் கோஹ்லி கூறுகையில், ''டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தேர்தலில் பயன்படுத்துவதை, 2014லிலேயே பா.ஜ., துவக்கி வைத்தது.
''தற்போது, அனைத்து வகை சமூக ஊடகங்களிலும் பா.ஜ., முன்னிலையில் உள்ளது. பெரும்பாலான மக்களிடம் மொபைல்போன்கள் இருப்பதால், அதன் வாயிலாக வாக்காளர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது, பா.ஜ.,வுக்கு மிகவும் சுலபமாக அமைந்துள்ளது,'' என்றார்.
இதைத் தவிர, பல்வேறு நிலைகளில், பல வாட்ஸாப் குழுக்களை, பா.ஜ., உருவாக்கி வைத்துள்ளது. இவ்வாறு பல லட்சம் குழுக்கள், பா.ஜ.,வுக்கான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
பொய் தகவல்கள்
பா.ஜ.,வை போலவே, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் சமூக ஊடகங்களுக்காக பெரும் படையை உருவாக்கி வைத்துள்ளன.
தகவல் தொழில்நுட்ப அணி என்ற பெயரில், ஒவ்வொரு கட்சியும், 'வார் ரூம்' அமைத்து, மொபைல் போன் வாயிலாக பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
ஓட்டு சேகரிப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர் தரப்பினரை கிண்டலடிக்கும், விமர்சிக்கவும் இந்த வியூகத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.
''இந்த டிஜிட்டல் யுகத்தில், சமூக வலைதளங்கள் வாயிலாக பல பொய் தகவல்களும் அதிகளவில் பரப்பப்படுகின்றன. அதனால், வாக்காளர்கள் உஷாராக இருக்க வேண்டியுள்ளது,'' என, சைபர் சட்ட நிபுணர் பவன் தக்கல் தெரிவித்துள்ளார்.
- நமது சிறப்பு நிருபர் -

