10 ஆண்டாக தகுதியானோருக்கு பத்ம விருது: கவர்னர் பெருமிதம்
10 ஆண்டாக தகுதியானோருக்கு பத்ம விருது: கவர்னர் பெருமிதம்
UPDATED : பிப் 16, 2025 12:28 PM
ADDED : பிப் 16, 2025 04:43 AM

சென்னை: ''கடந்த, 10 ஆண்டு களாக, தகுதியான நபர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்து வருகின்றன,'' என கவர்னர் ரவி பெருமையாக கூறினார்.
மத்திய அரசு, 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை சமீபத்தில் அறிவித்தது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த, 13 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்தன.அவர்களுக்கான பாராட்டு விழா, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. விருதுக்கு தேர்வானவர்களுக்கு, கவர்னர் ரவி சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.
பத்ம விருதுகள் பெற உள்ள, 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திர குமார், குருவாயூர் துரை, தாமோதரன், ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், வேலு ஆசான், ராதாகிருஷ்ணா தேவசேனாபதி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.நடிகர் அஜித்குமார் பங்கேற்கவில்லை; கிரிக்கெட் வீரர் அஸ்வின் சார்பாக, அவரது பெற்றோர் பங்கேற்றனர்.
விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
பத்ம விருது பெறுவோரோடு இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுக்கு தேர்வாகி உள்ள ஒவ்வொருவரும், தாங்கள் சார்ந்த துறைகளுக்காக, தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உள்ளனர்.
அவர்கள் கடினமாக உழைத்ததால், இந்த இடத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த விருது
பெறுபவர்களால், நம் நாடே பெருமை அடைகிறது.
விருது பெற உள்ளவர்களின் பங்களிப்பு, நாட்டுக்கும், மக்களுக்கும், பெருமை அளிப்பதாக அமைந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக பத்ம விருதுகள் தகுதியான நபர்களுக்கு கிடைத்து வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பத்ம விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, எந்த ஒளிவு மறைவுமின்றி வெளிப்படைத் தன்மையுடன், விருதுகளை வழங்கி வருகிறது.
அரசு சாராத நடுவர் குழு வாயிலாக, விருதுகள் வழங்கப்படுவது பெருமைக்குரியது. இதனால், சமூகத்தில் வெளியில் தெரியாமல், சிறப்பாக சேவை செய்பவர்களை, மத்திய அரசு தேடிக் கண்டறிந்து, பத்ம விருதுகளை வழங்க முடிகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

