ADDED : ஜூலை 05, 2025 02:45 AM

சென்னை: “தமிழக நன்மைக்காக ஓரணியில் திரள்வோம் என்றால், நாங்களும் முதல்வர் பக்கம் இருக்க தயார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை. காவல் துறையை, தலைமை செயலகத்தில் இருந்து யாரோ இயக்குகின்றனர்.
திருப்புவனம் காவலாளி அஜித்குமார் மீதான புகாரில், வழக்குப்பதிவு செய்யாமல், போலீசார் அவரை அடித்து கொலை செய்துள்ளனர். முதல்வர் ஈசியாக 'ஸாரி' என்று சொல்கிறார்.
புகார் கொடுத்த நிகிதாவுக்கு ஆதரவாக, தலைமை செயலகத்தில் இருந்து போன் செய்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜித்குமாரின் குடும்பத்திற்கு, குறைந்தது 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்த, துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட ஜெயராஜ் - பெனிக்ஸ் வழக்கில், இன்னும் தீர்வு வரவில்லை. அண்ணா பல்கலை வழக்கில் ஞானசேகரனுக்கு, ஐந்து மாதங்களுக்குள் தீர்ப்பு வந்துவிட்டது.
சாத்தான்குளம் வழக்கை தாமதம் செய்வது ஏன்? இதை எல்லாமல் மறைக்கவே, ஓரணியில் திரள்வோம் என்று பிரசாரம் செய்கின்றனர்.
தமிழக நன்மைக்காக ஓரணியில் திரள்வோம் என்றால், நாங்களும் முதல்வர் பக்கம் இருக்க தயார். தமிழக வளர்ச்சிக்கும், சட்டம் - ஒழுங்கிற்கும் முதல்வர் எதுவுமே செய்யாததைத்தான் குறை சொல்கிறோம்.
இனி எல்லா போராட்டங்களிலும் அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து செயல்படும். கூட்டணிக்கு விஜய் வருவது குறித்து கருத்து சொல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன; நல்லதே நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.