ADDED : ஏப் 27, 2025 03:29 AM

சைவ சமய குரவருள் ஒருவரான மாணிக்கவாசக பெருமானுக்கு, சிவபெருமானே குருவடிவாக வந்து திருவடி தீட்சை அளித்தருளி, திருவாசகம் பாட வைத்த தலம் திருப்பெருந்துறை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டத்தில், இன்று ஆவுடையார்கோவில் என்ற பெயரில் இருப்பது தான், திருப்பெருந்துறை. இங்குள்ள ஆத்மநாத சுவாமி கோவிலை, மாணிக்கவாசகரே கட்டினார் என்பது ஐதீகம்.
இக்கோவில், திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இங்குள்ள இறைவன் பெயர் ஆத்மநாத சுவாமி; அம்மை யோகாம்பிகை. இந்த இரு தெய்வங்களுக்கும் உருவம் கிடையாது; தலவிருட்சம் குருந்த மரம்.
இந்த ஆவுடையார்கோவில், பொ.யு., 16ம் நுாற்றாண்டின் இறுதியில் வாமதேவ பண்டாரம் என்பவர் காலத்தில் கட்டப்பட்டது. மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு தொடர்பான சிற்பங்களும், ஓவியங்களும் இக்கோவிலின் சிறப்பு அம்சங்கள்.
இங்கு அமைச்சர் கோலம், அடியார் கோலம், திருவாசக ஓலைச்சுவடியுடன் என மூன்று கோலங்களில் மாணிக்கவாசகர், குதிரை மேல் வரும் சிவபெருமான், அரிமர்த்தன பாண்டியன், குறவன், குறத்தி, உக்கிர நரசிம்மர், பத்திரகாளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், ரிஷபாந்திகர், சங்கர நாராயணர், வில்லேந்திய வேலவர், குழலுாதும் கண்ணன், ரணவீரபத்திரர், அகோர வீரபத்திரர் ஆகிய சிற்பங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்வன.
அத்துடன், இக்கோவிலின் சிறப்பே கொடுங்கை தான். பஞ்சாட்சர மண்டபத்தின் மேல் மூன்று பகுதிகளிலும் இருந்து மழைநீர் வடிய இறக்கி விடப்பட்டது போல, வளைவாகக் கல்லில் அமைக்கப்பட்டது தான் கொடுங்கை.
கொடுங்கையின் உள்புறம், முறுக்குக் கம்பி, பட்டைக் கம்பி, திரணைக் கம்பி, உருண்டைக் கம்பி உள்ளிட்ட ஆறு வகையான கம்பிகளை கல்லிலேயே செதுக்கி இணைத்துள்ளனர். கொடுங்கையின் மேல் பகுதியில் செதுக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான பூங்கொடிகள் கற்பனையின் உச்சம் எனலாம்.
பஞ்சாட்சர மண்டபத்தின் அருகிலுள்ள சிவானந்த மாணிக்கவாசகர் கோவிலில் தான், மாணிக்கவாசகரின் வரலாறு முழுதும் அற்புத ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
மற்ற சிவாலயங்களை போல இங்கு பலிபீடம், கொடிமரம், நந்தி, உற்சவ மூர்த்திகள் என எதுவும் கிடையாது. மாணிக்கவாசகருக்கு மட்டும் உற்சவ மூர்த்தி உண்டு.
மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி மகம் ஆகியவற்றை முன்னிட்டு ஆண்டுக்கு இருமுறை, 10 நாட்கள் திருவிழா மாணிக்கவாசகருக்கே நடக்கும். அப்போது, மாணிக்கவாசகரே தேர் உட்பட அனைத்து வாகனங்களிலும் எழுந்தருளி வீதியுலா வருவார்.
இத்தகைய சிறப்பு மிக்க இக்கோவிலில், 2006ம் ஆண்டில் கும்பாபிேஷகம் சிறப்புற நடந்தது. 20 ஆண்டுகள் கடந்த நிலையில், கோவிலின் பல பகுதிகள் உடனடியாக திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.
இதையடுத்து, திருவாவடுதுறை ஆதீனம், 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளின் ஆணைப்படி, 2022 ஏப்ரல் 23ம் தேதி திருப்பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன. மொத்த திருப்பணிகளுக்கும், 4 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என, திட்டமிடப்பட்டு உள்ளது.
மாணிக்கவாசக பெருமான் அருள் பெற்ற திருப்பெருந்துறை கோவில் திருப்பணியில் உலகம் முழுவதும் உள்ள சிவநேயச் செல்வர்கள், அன்பர்கள், அடியார் பெருமக்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்றும், இத்திருப்பணிக்கு பணமாகவோ பொருளாகவோ உதவி செய்து ஸ்ரீஆத்மநாத பெருமானின் பேரருளைப் பெற்று உய்ய வேண்டும் எனவும் திருவாவடுதுறை ஆதீனம் அழைக்கிறது.
திருக்கோவில் திருப்பணி வங்கி கணக்கு விபரம்
THIRUPPANI SCHEME FUND ARULMIGU ATHMANATHASWAMY TEMPLE
வங்கி: STATE BANK OF INIDA கிளை: AVUDAIYARKOIL
கணக்கு எண்: 32876271160 IFSC CODE: SBIN0014401
HEREDITARY TRUSTEE SRI ATHMANATHASAMY TEMPLE SILVER RATHAM ACCOUNT
வங்கி: INDIAN BANK கிளை: AVUDAIYARKOIL
கணக்கு எண்: 848678448 IFSC CODE: IDIB000A103
திருப்பணிகள் விவரம்
வ. எண் திருப்பணி விவரம் மதிப்பீடு தொகை
1. ஸ்ரீவெயிலுவந்த விநாயகர் - ரூ. 5,85,000
2. ஆத்மநாதர் மூலஸ்தானம் - ரூ. 11,95,740
3. மாணிக்கவாசகர் உள்மண்டபம் - ரூ. 9,32,100
4. யோகாம்பாள் சந்நிதி - ரூ. 3,97,930
5. குருந்தமர ஆலயம் - ரூ. 5,97,740
6. திருவாசக கோவில் - ரூ. 1,59,380
7. முருகன் சந்நிதி முன் மண்டபம் - ரூ. 17,38,295
8. இரண்டாம் பிரகாரம் கதவு வேலை - ரூ. 72,60,110
9. திருமடைப்பள்ளி - ரூ. 6,81,720
10. கஜலெட்சுமி மண்டபம் - ரூ. 1,13,100
11. நடுக்கோபுர கதவு வேலை - ரூ. 5,49,900
12. சிவானந்த மாணிக்கவாசகர் - ரூ. 26,52,975
13. பஞ்சாட்சர மண்டபம் - ரூ. 8,06,325
14. அன்னபூரணி விநாயகர் - ரூ. 78,000
15. இரண்டாம் பிரகாரம் சுவாமி முன்மண்டபம் - ரூ. 4,56,040
16. மூன்றாம் பிரகாரம் வெளிமண்டபம் வடக்கு - ரூ. 14,63,670
17. இராஜகோபுரம் - ரூ. 42,25,000
18. தியாகராஜ மண்டபம் - ரூ. 13,02,444
19. அகோர வீரபத்திரர் சந்நிதி மண்டபம் - ரூ. 6,37,000
20. மூன்றாம் பிரகாரம் வேலைகள் - ரூ. 20,03,040
21. திருமதில் - ரூ. 5,59,000
22. திருக்கோவில் முழுவதும் வாட்டர் வாஷ் - ரூ. 1,35,62,119
மொத்தம் - ரூ. 4,19,56,628
தொடர்புக்கு
கண்காணிப்பாளர், ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோவில், ஆவுடையார்கோவில்
04371 - 233301, 82484 15553