முதல்வர் திறந்துவைத்த குடியிருப்பு ஒரே ஆண்டில் சேதமான சோகம்
முதல்வர் திறந்துவைத்த குடியிருப்பு ஒரே ஆண்டில் சேதமான சோகம்
UPDATED : டிச 10, 2024 04:23 AM
ADDED : டிச 10, 2024 12:53 AM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக, மாவட்டத்தில் வசிக்கும் இருளர்களுக்கு 443 வீடுகள் கட்ட முடிவானது.
தலா 269 சதுர அடியில், ஒரு வீட்டுக்கு 4.60 லட்சம் ரூபாய் என கணக்கிட்டு, 20.37 கோடி ரூபாய் நிதியில் இந்த வீடுகள் கட்டப்பட்டன.
![]() |
புகார்
மலையாங்குளம் - 178; காட்ராம்பாக்கம் - 31; ஊத்துக்காடு - 76; குண்டுகுளம் - 58; மற்றும் சிங்காடிவாக்கம் கிராமத்தில் 100 வீடுகள் என, ஐந்து இடங்களில் மொத்தம் 443 வீடுகள் கட்டப்பட்டன.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில், அந்தந்த பி.டி.ஓ., அலுவலகங்கள் மேற்பார்வையில் வீடுகள் கட்டும் போதே, தரமற்ற முறையில் கட்டுவதாக, மலையாங்குளம் ஊராட்சியில் புகார் எழுந்தது.
அப்போதைய கலெக்டர் ஆர்த்தி, திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி ஆகியோர், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை கடிந்து கொண்டனர்.
அனைத்து பணிகளையும் முடித்து, 2023 டிசம்பரில், முதல்வர் ஸ்டாலின், 443 வீடுகளையும் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பின் பயனாளிகள், அந்த வீட்டிற்குள் குடிபெயர்ந்து வசித்தனர்.
வீடுகள் திறக்கப்பட்டு ஓராண்டு கூட முழுமை பெறாத நிலையில், தரை, கான்கிரீட் கூரை உள்ளிட்ட இடங்கள் சேதமாகியுள்ளது, பழங்குடியின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
சிரமம்
சமீப நாட்களில் பெய்த மழைக்கு, காட்ரம்பாக்கம், ஊத்துக்காடில் கட்டியுள்ள பல இருளர் வீடுகளில் கான்கிரீட் கூரையில் தண்ணீர் கசிந்து வருகிறது. தரை முழுதும் பெயர்ந்து, பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், பயனாளிகள் துாங்க சிரமப்படுகின்றனர்.
இருளர்கள் கூறியதாவது:
கட்டி கொடுக்கப்பட்ட ஓராண்டிலேயே, எங்களது வீடுகளின் கான்கிரீட் தளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் கசிகிறது. தரை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமாகிவிட்டது.
வருத்தம்
போதிய ஜல்லி, சிமென்ட் கொண்டு தரை அமைக்கப்படவில்லை. இப்போதே கூரை, தரையில் சேதமடைவதால், வரும் ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகும்.
சாலை, குடிநீர், மின் இணைப்பு போன்ற வசதிகள் செய்து கொடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், வீடு தரமான முறையில் கட்டவில்லை என்பது வருத்தமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இருளர்களுக்கு கட்டி கொடுத்த வீடுகள் சேதமடைவதாக, எங்களுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை. புகார்கள் வந்தால், ஊரக வளர்ச்சி துறையிடம் விளக்கம் கேட்கப்படும். சேதமான வீடுகள் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி,
காஞ்சிபுரம்.