உண்மையான கள நிலவரம் தெரியாமல் ஆளுங்கட்சி மேலிடம் தவிப்பு
உண்மையான கள நிலவரம் தெரியாமல் ஆளுங்கட்சி மேலிடம் தவிப்பு
ADDED : ஜன 23, 2026 05:57 AM

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இரு மாதங்களே உள்ள நிலையில் மக்களின் மனநிலை, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து, உளவுத் துறையிடம் இருந்து உண்மையான தகவல்கள் கிடைக்காததால் தி.மு.க., மேலிடம் குழப்பம் அடைந்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில், 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என தி.மு.க., தலைமை கூறி வருகிறது.
இருந்தாலும், கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மக்களின் மனநிலை, தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு சாதகமான தொகுதிகள், ஆதரவு நிலை, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு உள்ளிட்ட தகவல்களை, உளவுத்துறை வாயிலாக பெற முடிவெடுத்து, அத்துறை அதிகாரிகளிடம் தகவல்களை சேகரித்து தருமாறு கோரி உள்ளது, ஆட்சி மேலிடம்.
இதற்காகவே, பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த தகவல்கள் ஆளும் தரப்பின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக இருப்பதால், அதை அளிக்க உளவுத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
கூடவே, தென் சென்னையில் இரண்டு, வட சென்னையில் ஒன்று, காஞ்சிபுரத்தில் இரண்டு தொகுதிகள் உட்பட தமிழகம் முழுதும் 75 இடங்களில் தி.மு.க., பலவீனமாக இருக்கும் தகவலையும் கண்டறிந்திருக்கும் உளவுத்துறை அதிகாரிகள், அதையும் ஆட்சி மேலிடத்துக்கு தெரிவிக்காமல் உள்ளனர்.
உளவுத்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கும் ஆட்சி மேலிடத்தில் இருப்போர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நடத்தும் ஆய்வு நிறுவனம் வாயிலாகவும் கள நிலவரங்களை சேகரித்து வருகின்றனர்.
குறிப்பாக, தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் எப்படி உள்ளன; யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பளிக்கலாம் என தகவல் கேட்டுள்ளனர். ஆய்வு நிறுவனத்தாரும் கள நிலவரங்களைக் கொண்டு அறிக்கை அளிப்பதாகக் கூறியுள்ளனர்.
நிறுவனத்தில் பணியிலிருப்போர் சிலர், தாங்கள் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், பரிசுகளை அள்ளிக் கொடுத்தோருக்கும் சாதகமான அறிக்கையை, தி.மு.க., தலைமையிடம் கொடுத்துள்ளனர்.
இது, கட்சி நிர்வாகிகள் சிலர் வாயிலாக தி.மு.க., தலைமைக்குத் தெரியவர, இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்ட நிறுவன ஊழியர்கள் பலரையும் வேலை நீக்கம் செய்துள்ளனர்.
உளவுத்துறை அறிக்கையும் சரிவர கிடைக்காததோடு, சபரீசன் நிறுவனத்தின் அறிக்கையும் தவறுதலாக அளிக்கப்பட்டதால், உண்மையான கள நிலவரம் அறிய முடியாமல் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது, தி.மு.க., தலைமை. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

