/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
குஜராத் மாநிலத்தின் சோம்நாத் கோவில் ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை
/
குஜராத் மாநிலத்தின் சோம்நாத் கோவில் ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை
குஜராத் மாநிலத்தின் சோம்நாத் கோவில் ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை
குஜராத் மாநிலத்தின் சோம்நாத் கோவில் ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை
PUBLISHED ON : ஜன 05, 2026 05:42 AM

-நரேந்திர மோடி-
பாரத பிரதமர் மற்றும் சோம்நாத் அறக்கட்டளையின் தலைவர்
சோம்நாத்... இந்த கம்பீரமான கோவில், நம் நாட்டின் மேற்கு கடற்கரையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபாஸ் பட்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது. துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம், நாடு முழுதும் உள்ள 12 ஜோதிர் லிங்கங்கள் பற்றி குறிப்பிடுகிறது.
அதில், முதல் ஜோதிர்லிங்கமாக சோம்நாத் சிவலிங்கம் கருதப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை தரிசித்தாலே ஒருவர் பாவங்களிலிருந்து விடுபட்டு, தன் நியாயமான விருப்பங்களை பெற்று, மரணத்திற்கு பின் சொர்க்கத்தை அடையலாம் என்றும் கூறப்படுகிறது.
வீரத்தின் அடையாளம்
லட்சக்கணக்கானோரின் பக்தியையும், பிரார்த்தனைகளையும் ஈர்த்த இந்த சோம்நாத் கோவில், துரதிருஷ்டவசமாக அழிவை நோக்கமாகக் கொண்ட வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் தாக்கப்பட்டது.
பின், அது புத்துயிர் பெற்றுள்ள நிலையில், இந்த 2026- சோம்நாத் கோவிலுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். இந்த மாபெரும் புண்ணிய தலத்தின் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டு, 1,000 ஆண்டுகளாகிறது. 1026- ஜனவரி மாதத்தில் தான், கஜினி முகமது இந்த ஆலயத்தைத் தாக்கி, மாபெரும் கலாசார சின்னத்தை அழிக்க முயன்றார்.
சோம்நாத்தின் மீது, 1026ல் நடந்த முதல் படையெடுப்பு, அந்நகரத்து மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரம், ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு போன்றவை பல்வேறு வரலாற்று பதிவுகளில் உள்ளன.
அவற்றை படிக்கும் போது இதயம் நடுங்குகிறது. ஒவ்வொரு வரியும் துயரம், கொடுமை போன்றவற்றால் நிறைந்துள்ளன. இந்த தாக்குதல் நடந்து 1,000 ஆண்டுகளுக்கு பிறகும், அழிவின் அடையாளமாக சோம்நாத் இல்லை என்று நான் உறுதியாக கூறுகிறேன். அது, பாரத அன்னையின் கோடிக்கணக்கான குழந்தைகளின் அசைக்க முடியாத வீரத்தின் அடையாளமாகவே உள்ளது.
சோம்நாத்துக்கு, 1890ம் ஆண்டுகளில் சுவாமி விவேகானந்தர் வருகை தந்தார். அந்த அனுபவம் அவரை மிகவும் நெகிழச் செய்தது. 1897ல் சென்னையில் ஆற்றிய ஒரு சொற்பொழிவின் போது, 'தென் மாநிலங்களில் உள்ள பழமையான கோவில்களும், குஜராத்தின் சோம்நாத் போன்ற கோவில்களும் உங்களுக்கு பெரும் ஞானத்தை கற்பிக்கும்.
இந்தக் கோவில்கள் நுாற்றுக்கணக்கான தாக்குதல்களின் அடையாளங்களையும், நுாற்றுக்கணக்கான முறை புத்துயிர் பெற்ற அடையாளங்களையும் எவ்வாறு தாங்கி நிற்கின்றன என்பதைக் கவனியுங்கள்' என்றார்.
பிரமாண்ட கோவில்
சுதந்திரத்திற்கு பின், சோம்நாத் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பும் புனிதமான கடமை, சர்தார் வல்லபபாய் படேல் வசம் சென்றது. அவர், 1947-ல் தீபாவளி நேரத்தில் அங்கு மேற்கொண்ட பயணம் அவரை மிகவும் நெகிழச் செய்தது.
அதன் விளைவாக, அந்த கோவில் அதே இடத்தில் மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்தார். இறுதியாக 1951- மே 11-ம் தேதி, சோம்நாத்தில் பக்தர்களுக்காக பிரமாண்டமான கோவில் திறக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில், அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் பங்கேற்றார். ஆனால், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை காண சர்தார் படேல் உயிருடன் இல்லை. ஆனால், அவரது கனவு நிறைவேற்றப்பட்டு தேசத்தின் முன் கம்பீரமாக கோவில் நின்றது.
பழங்காலம் தொட்டே, சோம்நாத் பல்வேறு தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து வருகிறது. பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய, மிகவும் மதிக்கப்பட்ட சமண துறவியான கலிகால சர்வக்ஞ ஹேமச்சந்திராச்சாரியார், சோம்நாத்துக்கு சென்றார்.
அங்கு பிரார்த்தனை செய்த பின், அவர் ஒரு ஸ்லோகத்தை சொன்னதாகக் கூறப்படுகிறது. அதன் பொருள், -'உலகப் பிறவிக்கான விதைகளை அழித்து, ஆசையையும் அனைத்து துன்பங்களையும் நீங்கியவருக்கு என் வணக்கங்கள்' என்பதாகும். இப்போதும், மனதிலும் ஆன்மாவிலும், ஆழமான உணர்வை எழுப்பும் ஆற்றலை சோம்நாத் கொண்டுள்ளது.
கடந்த 1026-ல் நடந்த முதல் தாக்குதலுக்கு பின், 1,000 ஆண்டுகள் கடந்தும், சோம்நாத்தில் உள்ள கடல் அன்றைய அதே தீரத்துடன் இப்போதும் கர்ஜித்து அலைகளின் ஒலியை எழுப்புகிறது. சோம்நாத்தின் கரைகளை தழுவும் அலைகள் ஒரு கதையைச் சொல்கின்றன. என்ன நடந்தாலும், அந்த அலைகளை போலவே, சோம்நாத்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறது.
புதிய உறுதி
கடந்த காலத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் இப்போது காற்றில் கலந்த துாசியாகி விட்டனர். அவர்களின் பெயர்கள் மறைந்து விட்டன. அவர்கள் வரலாற்றின் ஏடுகளில் அடிக்குறிப்புகளாகி விட்டனர். ஆனால், சோம்நாத் பிரகாசமாக நின்று, அடிவானத்தை தாண்டி ஒளி வீசுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தாக்கப்பட்டு, அதன்பின் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்ட சோம்நாத் ஆலயம், மீண்டும் மீண்டும் எழ முடிகிறது. அதேபோல, படையெடுப்புகளுக்கு முன் நம் தேசம் கொண்டிருந்த அதே பெருமையை, நம்மால் நிச்சயமாக மீட்டெடுக்க முடியும்.
ஸ்ரீ சோம்நாத் மகாதேவரின் ஆசீர்வாதங்களுடன், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான புதிய உறுதியுடன் நாம் முன்னோக்கிப் பயணிப்போம்.
ஜெய் சோம்நாத்!

