‛ஹிந்து சமூகத்தில் பிளவுகள் கிடையாது; அனைவரும் ஒன்றாகவே வாழ்கின்றனர்': ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்
‛ஹிந்து சமூகத்தில் பிளவுகள் கிடையாது; அனைவரும் ஒன்றாகவே வாழ்கின்றனர்': ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்
ADDED : ஜன 12, 2026 01:36 AM

புதுடில்லி: “சாதி, மதம், மொழி என ஹிந்து சமூகம் பிரிந்து கிடப்பதாக உலகத்தின் பார்வைக்கு தெரியலாம். ஆனால், ஹிந்து சமூகத்திற்குள் எந்த பாகுபாடும் கிடையாது. அனைவரும் ஒன்றாகவே வாழ்கின்றனர்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனத்தில் சனாதன கலாசார திருவிழா நடந்தது. இதில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் நேற்று பேசியதாவது:
ஹிந்து சமூகத்திற்குள் எந்தப் பாகுபாடும் இல்லை. சமூகத்திற்குள் வாழும் அனைவரும் ஒன்றே என நாங்கள் கருதுகிறோம். ஒட்டுமொத்த ஹிந்து சமூகமும் ஒன்றே என நாங்கள் நம்புகிறோம். ஆனால், சாதி, மதம், சமூகம், மொழி என ஹிந்துக்கள் பிரிந்து கிடப்பதாக உலகத்தின் கண்களுக்கு தெரிகிறது.
ஹிந்துக்களில் பல்வேறு பிரிவினர் உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் எனக்கு நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் உண்டு, பருகி, அளவளாவி இருக்கிறேன். மகிழ்ச்சியுடன் நண்பர்களாகவே என்னுடன் பழகி வருகின்றனர்.
ஆர் .எஸ்.எஸ்., அமைப்பு நுாறு ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதற்காகவே, நாடு முழுதும் ஹிந்து சம்மேளனங்கள் நடத்தப்படுகின்றன. அதே சமயம், ஆர்.எஸ்.எஸ்., பலத்தை காட்டுவதற்காக நாங்கள் அதை நடத்தவில்லை.
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் பிரச்னை நிலவி வருகிறது. அந்த பிரச்னைகளை பற்றியே பேசிக் கொண்டிருந்தால் தீர்வுகள் கிடைக்காது. பிரச்னைகளை விவாதிக்க முன்னுரிமை தராமல், தீர்வுகளை கண்டறிய முன்னுரிமை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு பயணத்தை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் ஷதக் திரைப்படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா டில்லியில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்று பேசிய மோகன் பாகவத், “ஆர்.எஸ்.எஸ்., தன் நுாற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இந்த அமைப்பு பரிணமித்து புதிய வடிவங்களை எடுக்கிறது. ஆனால், மக்களோ ஆர்.எஸ்.எஸ்., மாறிவிட்டது என கருதுகின்றனர்.
“உண்மையில் ஆர்.எஸ்.எஸ்., மாறவில்லை. காலப்போக்கில் படிப்படியாக பரிணமித்து, விரிவடைந்து வருகிறது. “விதைக்குள் இருந்து இனிப்பான கனிகள் தரும் மரம் வளர்வது போல, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வளர்ச்சி மெல்ல பரிணமித்து வருகிறது. விதைக்குள்ளேயே மரம் இருக்கிறது என்பது தான் அடிப்படையான உண்மை,” என்றார்.

