குற்றம் செய்வோர் செய்து கொண்டுதான் இருப்பர்: சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
குற்றம் செய்வோர் செய்து கொண்டுதான் இருப்பர்: சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
ADDED : டிச 27, 2024 06:30 AM

“பா.ஜ., ஆளும் மாநிலங்களைவிட, தமிழகத்தில் வன்கொடுமை குறைவு. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான்,” என, அமைச்சர் ரகுபதி தெரிவித்துஉள்ளார். பெண்களுக்கு எதிராக ஒரு குற்றமும் நடக்கக்கூடாது; நடந்தால், அதற்கு பாதுகாப்பு குறைபாடு காரணம் என்பது கண்கூடு என்ற நிலையில், அமைச்சர் ரகுபதியின் பேட்டி பல சந்தேகங்களை எழுப்புகிறது. அதற்கு அவர் விளக்கம் தருவாரா என, அரசியல் மற்றும் சமூகப் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அவர் அளித்த பேட்டி:
* அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம். இது, பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் போன்றதல்ல. பொள்ளாச்சி சம்பவத்தில், முக்கிய பிரமுகர் மகன் ஈடுபட்டிருந்தார்.
அதை மறைக்க, ஆட்சியாளர்கள் முழு முயற்சி செய்தனர். எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாலியல் வன்கொடுமையில், சம்பவத்திற்கு சம்பவம் வேறுபடுத்திப் பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. ஆண் நபர், முக்கிய பிரமுகராக இருந்தால் என்ன; சாதா பிரஜையாக இருந்தால் என்ன; பெண்ணுக்கு தானே பாதிப்பு? சம்பவங்களை தரம் பிரிப்பது நல்லதல்ல என்பது ரகுபதிக்கு தெரியாதா?
நடந்த சம்பவத்திற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உடனடி விசாரணையில் இறங்கி குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க முயலாமல், 'அந்த சம்பவம் நடந்ததே... இந்த சம்பவம் நடந்ததே...' என்ற சப்பைக்கட்டு பேச்சு, யாரை காப்பாற்ற? எதற்காக இந்த அணுகுமுறை?
தமிழகத்தில் 24 குற்றங்கள் தான் நடந்தன எனச் சொல்வது, தான் சார்ந்த அமைச்சரவையின் பலவீனம் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது என்ற அடிப்படை உண்மையை ரகுபதி புரிந்து கொள்ளவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், குற்றம் ஒன்று நடந்தாலும், குற்றம் குற்றம் தானே? இரும்புக் கரம் கொண்டு தண்டனை கொடுத்தால், தொடர்ந்து குற்றங்கள் நடக்காமல் தவிர்க்க வேண்டியது அரசின் கடமை அல்லவா?
'குற்றம் செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பர்' என்பது என்ன மாதிரியான பதில்? குற்றம் செய்பவர்கள் எனத் தெரிந்தும், அவர்களிடம் மென்மையான போக்கை கடைப்பிடிக்கலாமா? 'கடமை'யை இப்போதுதான் ரகுபதி உணர்ந்தாரா?
'பெண்கள் படிக்க வருவதால் தான் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன' என, எந்த எதிர்க்கட்சியும் சொல்லவே இல்லையே? இவராக ஏன் இப்படி ஒரு கருத்தை வெளிக்கொணர்கிறார்? பெண்கள் வீட்டிலேயே இருந்து விட்டால், இத்தகைய குற்றங்கள் நடக்காது என்று மறைமுகமாக சொல்ல வருகிறாரா?
நம் மாநிலத்தில் நடக்கும் குற்ற சம்பவத்தை ஏன் தடுக்கவில்லை என்று கேட்டால், வெளி மாநிலங்களை சுட்டிக் காட்டுவது, இந்த அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது. சிறுபிள்ளைத்தனமான அமைச்சரின் பேச்சு, கோபத்தை வரவழைக்கிறது. சாதனைக்கு மற்ற மாநிலங்களை உதாரணம் காட்டலாம். இந்த மாதிரி விஷயங்களுக்கா காட்டுவது?
காவல் நிலையங்கள் அமைத்தால் போதுமா? குற்றப் பின்னணி உடையவர்களை வீதி உலா செய்ய அனுமதிப்பது தவறில்லையா? இப்படி இருந்தால், பாதிக்கப்பட்ட மாணவியர், பெண்கள், தங்களுக்கு ஏற்படும் பாலியல் அவமானங்களை வெளியே சொல்ல முற்படுவரா? ஊர் முழுக்க மது விற்றுக்கொண்டே, 'மது குடிக்காதீர்கள்' என்று சொல்வது போல்தான் இது!
அமைச்சரவையில் இருப்பவர்களை பார்க்க அதிக நிபந்தனைகள், நடைமுறைகள் உண்டு. அதையும் தாண்டி யாராவது வந்து, அவர் அமைச்சரை சந்தித்து சென்றபின், அவரை எங்களுக்கு தெரியாது என்று சொல்ல முடியுமா?
அப்படியென்றால், தகவல்கள் வெளியானதற்கு யார் பொறுப்பு?
பல்கலை, கல்லுாரி களில் மாணவ - மாணவியர் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை உறுதி செய்ய வேண்டியது யார் பொறுப்பு?
- நமது நிருபர் -