உதயநிதியை கட்டுப்பாட்டில் கொண்டு வர திமுக.,வில் மூன்று தரப்பினர் முயற்சி
உதயநிதியை கட்டுப்பாட்டில் கொண்டு வர திமுக.,வில் மூன்று தரப்பினர் முயற்சி
ADDED : ஜூன் 25, 2026 05:54 AM

- நமது நிருபர் -
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில், தி.மு.க.,வில், மூன்று தரப்புக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, அவரது மருமகன் சபரீசனும், 'பென்' நிறுவன இயக்குநர் மணிகண்டனும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஸ்டாலின் என்ன பேச வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, அனைத்தையும் 'பென்' நிறுவனம் தான் பார்த்து கொண்டது.
பொருளாதார நிபுணர்
ஆரம்பத்தில் இருந்தே தனி ரூட்டில் சென்றதால், உதயநிதியை சபரீசன் ஆட்களால், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தற்போது, கட்சியின் முகமாக உதயநிதி வளர்வதால், அவரை, தங்கள் வசம் கொண்டு வர, வெவ்வேறு வழிகளில் சபரீசன் முயற்சிக்கிறார்.
'பென்' மணிகண்டனை, உதயநிதிக்கு பிடிக்காது என்பதால், அந்த இடத்துக்கு பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனை சபரீசன் கொண்டு வந்திருக்கிறார். அவர் வாயிலாக, உதயநிதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, சபரீசன் முயற்சிக்கிறார்.
உதயநிதி நண்பரான முன்னாள் அமைச்சர் மகேஷ், தேர்தலில் தோற்றதால், அவருக்கு போட்டியாக இருக்கும் முன்னாள் அமைச்சர் நேரு, எதிர்க்கட்சி துணைத் தலைவராகி, உதயநிதிக்கு நெருக்கமாகி வருகிறார்.
ஏற்கனவே, திருச்சியில் செல்வாக்கை இழந்த மகேஷ், கட்சியிலும் ஓரம் கட்டப்படுவோம் என பயப்படுகிறார். இதனால், உதயநிதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க, அவரை மகேஷ் சுற்றி வருகிறார்.
உதயநிதி வசித்து வரும், அரசு பங்களாவான 'குறிஞ்சி' இல்லத்தில், இதுவரை இளைஞரணி நிர்வாகிகள் தான் ஆதிக்கம் செலுத்தினர். தற்போது, எல்லா நிர்வாகிகளையும் உதயநிதி சந்திப்பதால், இளைஞரணியினருக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது.
எனவே, இளைஞர்அணியினர், உதயநிதியின் தனி உதவியாளர் செந்தில் தலைமையில் ஒரு குழுவை உருவாக்கி இருக்கின்றனர்.
உதயநிதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க, இளைஞரணியினர் வாயிலாகவே, செந்தில் முயற்சி செய்கிறார். இந்த குழப்பத்தில், த.வெ.க., அரசுக்கு எதிரான செயல்பாடுகளில், உதயநிதி பின்தங்குகிறார்.
ஒரே அணி
அதற்கு, அவரின் அரசியல் செயல்பாடுகளை கவனிக்கும் குறிஞ்சி இல்ல அணிக்கும், இளைஞரணி தலைமையகமான அன்பகம் அணிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதே காரணம். இதை ஒன்றிணைத்து, ஒரே அணியாக செயல்பட வைத்தால், உதயநிதி வேகமெடுப்பார்.
இந்த சூழல் உருவானால், உதயநிதியை கட்டுப்படுத்தும் பிறரின் முயற்சி தோல்வி அடைந்து விடும். எனவே தான், அவரை சுற்றியுள்ள குழுவுக்குள் திட்டமிட்டு புகைச்சல் மூட்டப்படுகிறது. இதை சரி செய்யாமல், உதயநிதியால் வேகமாக செயல்பட முடியாது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
