இரு நிமிடங்களில் முடிந்த ரயில் தட்கல் முன்பதிவு; பொங்கல் முடிந்து ஊர் திரும்புவோர் ஏமாற்றம்
இரு நிமிடங்களில் முடிந்த ரயில் தட்கல் முன்பதிவு; பொங்கல் முடிந்து ஊர் திரும்புவோர் ஏமாற்றம்
UPDATED : ஜன 19, 2025 03:45 AM
ADDED : ஜன 19, 2025 02:43 AM

முக்கிய தடங்களில் ரயில் தட்கல் முன்பதிவு, 2 நிமிடத்தில் முடிந்தால், பொங்கல் முடிந்து ஊர் திரும்புவோர் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிவோர், பொங்கல் பண்டிகையை கொண்டாட, சொந்த ஊர் வந்தனர். விடுமுறை முடிந்து, நாளை அலுவலக பணிக்கு செல்வோர், இன்று பஸ், ரயில்களில் பயணிக்க திட்டமிட்டுள்ளனர். அதை முன்னிட்டு இன்று இயக்கப்படும் ரயில்களுக்கு, தட்கல் பதிவு நேற்று காலை தொடங்கியது.
ஆனால், 2 நிமிடத்தில், முக்கிய தடங்களில் உள்ள டிக்கெட்டுகள் தீர்ந்தன. குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூரு, சென்னை செல்லும் ரயில்கள், ஐதராபாத் செல்லும் ரயில்களுக்கு போட்டி நிலவியது.
சேலம் ரயில்வே கோட்ட கணினி முன்பதிவு மையத்திலும், தட்கல் பதிவுக்கு ஏராளமானோர் காத்திருந்தனர். ஆனாலும் பலரும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதே போல தமிழக அரசின் விரைவு பஸ் டிக்கெட் முன்பதிவிலும், அனைத்து சீட்டுகளும் நிரம்பிவிட்டதால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு
இந்நிலையில், நாகர்கோவில், மதுரை, ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சென்னை, ஐதராபாத், பெங்களூரு செல்லும் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம், வழக்கத்தை விட இரு மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தது. அதிலும் விரைவாக, டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் நிலை இருந்தது.
- நமது நிருபர் -

