தென்னை சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள்: குஜராத் மாநில விவசாயிகளுக்கு பயிற்சி
தென்னை சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள்: குஜராத் மாநில விவசாயிகளுக்கு பயிற்சி
UPDATED : மார் 21, 2024 04:49 AM
ADDED : மார் 20, 2024 10:12 PM

உடுமலை : திருமூர்த்திநகர், தென்னை மகத்துவ மையத்தில், தென்னை சாகுபடி உயர்தொழில் நுட்பங்கள் குறித்து, குஜராத் மாநில விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
மத்திய அரசு தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன், குஜராத் மாநில மையம் சார்பில், மூன்று நாள் தமிழ்நாடு மாநிலம் கண்டுணர் சுற்றுலா திட்டத்தின கீழ், பயிற்சியளிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, உடுமலை அருகே, திருமூர்த்திநகர் பகுதியில் அமைந்துள்ள, மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின், தென்னை மகத்துவ மையத்தில், தென்னை சாகுபடியில் உயர் தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
குஜராத் மாநிலத்திலிருந்து வந்திருந்த, 20 விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தென்னை வளர்ச்சி வாரிய உதவி இயக்குனர் ரகோத்துமன், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
அப்போது, தளி தென்னை மகத்துவ மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் பல்வேறு திட்டங்கள், சாகுபடி பரப்பு விரிவாக்கத்திட்டம், தாய் நெற்று விதை தோட்டம் மற்றும் தென்னை நாற்றங்கால் அமைத்தல், மாதிரி செயல்விளக்க பண்ணை, அங்கக உரக்கூடம் அமைத்தல், மறுநடவு மற்றும் புத்துயிர் ஊட்டல் திட்டங்கள் குறித்தும், விவசாயிகள் பயன்பெறும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.
மேலும், தென்னை மற்றும் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கான காப்பீடு திட்டங்கள், தென்னை தொழில் நுட்ப இயக்கத்தின் வாயிலாக, தென்னை சார்ந்த தொழில்முனைவோருக்கான திட்டங்கள், சர்வதேச, இந்திய மற்றும் தமிழக அளவில் தென்னை பயிரின் இன்றைய நிலை, தென்னையில் ரகங்கள் மற்றும் தேர்வு, தென்னை பயிருக்கேற்ற மண் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலைகள், உயர்விளைச்சல் தென்னை ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்கள், தென்னை சாகுபடியில் உழவியல் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
மேலும், தாய் மரம் தேர்வு, விதைக்காய்கள் தேர்வு, நாற்றங்கால் மேலாண்மை, இளந்தென்னங்கன்றுகள் பராமரித்தல், தென்னையில் ஊடுபயிர்கள், பல அடுக்கு பயிர்கள், கலப்பு பண்ணையம், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் துல்லிய பண்ணையம் அமைக்கும் வழிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தென்னந்தோப்பில் பசுந்தாள் உரப்பயிர் வளர்ப்பு, தீவனபயிர் சாகுபடி, ஒருங்கிணைந்த பூச்சி, நோய், உரம், நீர் மற்றும் சத்து குறைபாடு மேலாண்மை, கலப்பின ரகம் தயாரித்தல், அறுவடை பின்செய் நேர்த்தி, மதிப்புக்கூட்டல், சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும், தென்னை உயர்சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தென்னை மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள், தென்னை உயிர்உரங்கள், ஒட்டுண்ணிகள், இரைவிழுங்கிகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிகொல்லிகள், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப்பொறி, தென்னந்தோப்புகளில் அமைத்தல் மற்றும் அவற்றால் ஏற்படும் பயன்கள் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயிகளின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய பதிலளிக்கப்பட்டது.

