திருப்பம் வருமா? கூட்டணி குறித்து தவெக அவசர ஆலோசனை
திருப்பம் வருமா? கூட்டணி குறித்து தவெக அவசர ஆலோசனை
UPDATED : மார் 14, 2026 07:04 AM
ADDED : மார் 14, 2026 05:37 AM

நமது நிருபர்
சி.பி.ஐ., விசாரணைக்காக, த.வெ.க., தலைவர் விஜய் இன்று டில்லி செல்லும் நிலையில், சென்னையில் நேற்று திடீரென மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி, 'கூட்டணி அமைக்கலாமா' என, அக்கட்சி தரப்பில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: த.வெ.க.,வை தே.ஜ., கூட்டணிக்கு கொண்டு வர, பா.ஜ., தரப்பில் முயற்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், கரூர் நெரிசல் மரணம் தொடர்பாக, டில்லியில் சி.பி.ஐ., விசாரணைக்கு நாளை ஆஜராக, விஜய்க்கு 'சம்மன்' அனுப்பப் பட்டுள்ளது.
அதன்படி, இன்று மதியம் 3:00 மணிக்கு சென்னையில் இருந்து டில்லி செல்லும் விஜய், அங்கு, கூட்டணி தொடர்பாக சில முக்கியமான நபர்களை சந்திக்கும் திட்டமும் உள்ளது. மறுநாள் காலையில், சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜராகிறார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், 'ஆன்லைன்' வாயிலாக கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி, 'கூட்டணிக்கு போகலாமா என்பது குறித்து கருத்துகளை சொல்லுங்கள்' என கேட்டுள்ளார்.
அப்போது, 'கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும். கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, பவன் கல்யாண் மாதிரி விஜய் துணை முதல்வர் ஆகலாம்' என பலரும் கூறியுள்ளனர். 'அப்படியென்றால், யாருடன் கூட்டணி அமைப்பது?' என ஆனந்த் கேட்க, 'யாருடனும் கூட்டணி அமைக்கலாம்' என பதில் அளித்துள்ளனர்.
ஆனால், ஒரு சில மா.செ.,க்கள், 'தனித்தே போட்டியிடலாம்' என கூற, 'கூட்டணி அமைத்து போட்டியிடலாமா; வேண்டாமா?' என கேட்டு, ஆன்லைன் வாயிலாக ஓட்டெடுப்பு நடத்தி உள்ளார் ஆனந்த்.
கூட்டத்தில் பங்கேற்ற 98 மா.செ.,க்களில் பெரும்பாலானோர், 'கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என்றே ஓட்டெடுப்பில் கூறியுள்ளனர். பின், இது தொடர்பாக விஜயுடன் ஆனந்த் ஆலோசனை நடத்தி உள்ளார். கூட் டணி தொடர்பாக கட்சித் தலைமை விரைவில் முடிவை அறிவிக்கும்.
இதற்கிடையில், விஜய்க்கு நெருக்கமான விஷ்ணு ரெட்டி, தன் கோவா நண்பர் மூலமாக, பா.ஜ., டில்லி புள்ளிகளிடம் கூட்டணி குறித்து பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

