தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு த.வெ.க., வெளிப்படையாக அழைப்பு
தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு த.வெ.க., வெளிப்படையாக அழைப்பு
UPDATED : பிப் 10, 2026 09:02 AM
ADDED : பிப் 10, 2026 04:49 AM

சென்னை: “தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள் த.வெ.க., பக்கம் வந்தால், ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும்,” என, அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
இது குறித்து, ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி:
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு ஒத்திவைப்பில் முறைகேடு நடந்திருக்கிறது. ஆண்டுக்கு 5 லட்சம் அரசு வேலை கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்த தி.மு.க., எதுவுமே செய்யவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில், எவ்வளவு வேலை வாய்ப்பை உருவாக்கினோம் என, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க., இன்னும் கூட்டணி பேச்சை துவக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் ஷோடங்கர், த.வெ.க., குறித்து முழு டேட்டாவை எடுத்துள்ளார். தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், த.வெ.க.,வுடன் கூட்டணி சேர வேண்டும் என, காங்கிரஸ் தொண்டர்கள் நினைக்கின்றனர்.
அதையே ஷோடங்கரும் சொல்வதால், தி.மு.க.,வுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான், கூட்டணி பேச அறிவாலய கேட்டை திறக்கவே பயப்படுகின்றனர்.
கிரிஷ் ஷோடங்கர் தங்களுக்கு அடிமையாக இல்லை என்பதால், அவரை மாற்றும்படி, ராகுலிடம் கனிமொழி கேட்டிருக்கிறார். அவரை மாற்ற பேச்சு நடக்கிறது.
தங்களுக்காக உழைக்கும் கூட்டணி கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு கொடுக்க தி.மு.க., பயப்படுகிறது. தி.மு.க., குழு அமைத்து கூட்டணி பேச்சை துவக்கினால், மறு நிமிடமே அந்த கூட்டணி உடைந்துவிடும். எல்லாரும் த.வெ.க., பக்கம் வந்து விடுவர்.
தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள், த.வெ.க., கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கான முழு மரியாதை கிடைக்கும். ஆட்சியில் பங்கும் கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

