த.வெ.க., தனித்து போட்டியிடும்: ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்
த.வெ.க., தனித்து போட்டியிடும்: ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்
ADDED : மார் 13, 2026 06:38 AM

சென்னை: ''சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்துதான் போட்டியிடும்,'' என, அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய, தமிழக அரசை கண்டித்தும், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், கரூர் சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் கைது செய்யப்படுவர். எம்.ஜி.ஆருக்கு பின், அரசியலுக்கு வரவிருந்த நடிகர் ரஜினி, தி.மு.க., மிரட்டலுக்கு பயந்து, 'ரெட் ஜெயன்ட்' நிறுவனத்தின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தனித்துப் போட்டியிட்டு வந்த ம.தி.மு.க.,வுக்கு, தி.மு.க., கூட்டணியில், நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றத்தைக் கொண்டு வருவோம் என கூறிய கமலும், மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வமும், தி.மு.க., பக்கம் போய் விட்டனர்.
மக்கள் ஆட்சியை நோக்கி, இந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்து தான் போட்டியிடும். அதற்காக, 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் தயார் செய்து விட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

