ஒரே வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பா; கட்டணம் கணக்கீட்டில் புதிய நடைமுறை
ஒரே வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பா; கட்டணம் கணக்கீட்டில் புதிய நடைமுறை
UPDATED : ஆக 21, 2024 06:43 AM
ADDED : ஆக 21, 2024 01:58 AM

திருப்பூர்: தமிழக மின்வாரியம், வருவாய் இழப்புகளை தடுத்து, வருவாயை பெருக்க, ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யும் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.
இதன்படி, ஒரு வீட்டில், இரு மின் இணைப்பு இருந்தால், ஒருங்கிணைந்த இணைப்பாக கருதி, மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில், 'சாப்ட்வேர்' மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மின்வாரிய அலுவலர்கள் கூறியதாவது: வீட்டு இணைப்புக்கு, ஒவ்வொரு பில் கணக்கீட்டிலும், 100 யூனிட் இலவசமாக கிடைக்கிறது. ஒரு வீட்டுக்கு, இரு இணைப்பு பெற்றிருந்தால், தலா, 100 யூனிட் இலவசமாக பெறுகின்றனர். அதேபோல், வர்த்தகத்துக்கு இரு இணைப்பு இருக்கும் போது, மின் கட்டணம் குறைவாக வரும்.
ரகசிய கணக்கெடுப்பில், இத்தகைய இணைப்புகள் கண்டறியப்பட்டு, தகுந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து, மின் கட்டணம் கணக்கிடப்படும். வீடுகளுக்கு, 100 யூனிட் கழித்து, மற்ற யூனிட்டுகளுக்கு கட்டணம் விதிக்கப்படும்.
கடைகளுக்கும், இரு மீட்டரில் உள்ள யூனிட்டுகளை கணக்கிட்டு, மொத்தமாக மின் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதனால், நீண்டகால வருவாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

