தியாகராஜன் கூட்டத்தை புறக்கணித்த மா.செ.,வால் சர்ச்சை: மதுரை தி.மு.க.,வில் முற்றுகிறது மோதல்
தியாகராஜன் கூட்டத்தை புறக்கணித்த மா.செ.,வால் சர்ச்சை: மதுரை தி.மு.க.,வில் முற்றுகிறது மோதல்
ADDED : பிப் 10, 2025 06:25 AM

மதுரை : மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மதுரையில், அமைச்சர் தியாகராஜன் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை சம்பந்தப்பட்ட தி.மு.க., நகர் செயலர் தளபதி புறக்கணித்ததால், மதுரை மாநகர உட்கட்சி மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.
மதுரையில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், தளபதி ஆகியோர் தனித்தனி அதிகார மையங்களாக உள்ளனர். புறநகர் பகுதியான தெற்கு, வடக்கு தி.மு.க., ஆகியவை மூர்த்தி கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால், மாநகர் பகுதியில் கோலோச்சுவதில் அமைச்சர் தியாகராஜன், நகர் செயலர் தளபதிக்கு இடையே மறைமுக பனிப்போர் நிலவுகிறது.
மாநகராட்சி மேயர், ஒரு மண்டல தலைவர், அமைச்சர் தொகுதி சார்ந்த மத்திய தொகுதி நிர்வாகிகள் தியாகராஜன் கட்டுப்பாட்டில் இருந்தாலும், கட்சி நிர்வாகிகள், பெரும்பாலான கவுன்சிலர்கள், புதிய நிர்வாகிகள் நியமனம் போன்றவை தளபதி கட்டுப்பாட்டில் உள்ளன.
இதற்கிடையே நான்கு சட்டசபை தொகுதிகள் கொண்ட நகர் தி.மு.க.,வை இரண்டாக பிரிக்க வேண்டும் என, அமைச்சர் தியாகராஜன் தீவிரமாக முயற்சிக்கிறார். அவ்வாறு நடந்தால் தனக்கான முக்கியத்துவம் பறிபோய்விடும் என தியாகராஜனுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து, கட்சிக்குள் தனக்கான ஆதரவு நிர்வாகிகளை வலுப்படுத்தும் பணியில் தளபதி ஈடுபட்டுள்ளார்.
![]() |
புறக்கணிப்பு
இந்நிலையில், மதுரையில் உள்ள அமைச்சர் தியாகராஜன் வீட்டிற்கு முதல்வர் மருமகன் சபரீசன் கடந்த வாரம் வந்தபோது, நகர் செயலர் வழியாக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இதற்கிடையே, மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி, அனைத்து மாவட்டங்களிலும் பிப்., 9ல் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்த தி.மு.க., தலைமை உத்தரவிட்டது.
மதுரை மாநகரில் அமைச்சர் தியாகராஜன், நகர் செயலர் தளபதி, சேலம் சுஜாதா பேசுவர் எனவும் தலைமை அறிவித்தது. ஆனால், சேலம் சுஜாதாவை தவிர்த்த தளபதி தரப்பு, கட்சியின் கொள்கை பரப்பு செயலர் லியோனியை பங்கேற்க வைத்தது. அதுதொடர்பாக வெளியான அழைப்பிதழில் நகர் செயலர் தளபதிக்கு பின், அமைச்சர் தியாகராஜன் பெயர் கடைசியாக இடம் பெற்றது.
இதனால் அமைச்சர் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்து, கட்சித் தலைமையின் கவனத்திற்கு, இவ்விவகாரத்தைக் கொண்டு சென்றனர். தலைமையின் கண்டிப்புக்குப் பின் அமைச்சர் பெயர் முதலிடத்திலும், லியோனி, தளபதி பெயர்கள் அடுத்தடுத்தும் இடம்பெற்ற அழைப்பிதழ் வெளியானது. இந்நிலையில் தான், அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தை தளபதி புறக்கணித்தார். இதனால், கட்சி தலைமை அதிர்ச்சியில் உள்ளது.
இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: மாவட்ட செயலர்தான் கூட்டத்தை நடத்த வேண்டும். பகுதிச் செயலர் தலைமை வகிக்க வேண்டும் என தலைமை வலியுறுத்தியது. ஆனால், மதுரையில் இரண்டும் நடக்கவில்லை. அமைச்சர் பங்கேற்றதால் கூட்டத்தை சிறப்பாக நடத்த நகர் தி.மு.க., திட்டமிடவில்லை.
முக்கியத்துவம்
அழைப்பிதழ், போஸ்டர்களில் சம்பந்தப்பட்ட பகுதிச் செயலர் பெயர் இடம் பெறவில்லை. அதேநேரம் அழைப்பிதழில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது; மற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பல வட்டச் செயலர்கள் பங்கேற்கவில்லை.
மேடையில் மூத்த நிர்வாகிகள் இருவர் வாக்குவாதம் செய்து மோதல் ஏற்படும் நிலையில், தொண்டர்கள் அமைதிப்படுத்தினர். அமைச்சர் - நகர் செயலருக்கு இடையேயான மோதலால், பட்ஜெட் கண்டன கூட்டம் சொதப்பலாக முடிந்தது. மொத்தத்தில், மதுரை தி.மு.க., இரு கூறாக பிளவுபட்டு நிற்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தளபதி தரப்பினர் கூறுகையில், “மதுரை நகர் செயலர் தளபதிக்கு, திடீர் பல்வலி ஏற்பட்டதால்தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டம் அவர் ஏற்பாட்டில்தான் சிறப்பாக நடந்தது,” என்றனர்.