உதயசூரியனா... டார்ச் லைட்டா...? தீவிர யோசனையில் கமல் கட்சி
உதயசூரியனா... டார்ச் லைட்டா...? தீவிர யோசனையில் கமல் கட்சி
ADDED : மார் 05, 2026 06:04 AM

சென்னை: தி.மு.க., தொகுதி பங்கீடு பேச்சு குழுவிடம், மக்கள் நீதி மய்யத்தின் தொகுதி பங்கீடு பேச்சு குழு, 12 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை அளித்துள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதா? டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது பற்றி, விரைவில் முடிவெடுப்பதாகவும் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், அதன் தொகுதி பங்கீடு பேச்சு குழுவினருடன், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, பொதுச்செயலர் அருணாசலம் ஆகியோர் பேச்சு நடத்தினர். அப்போது, 12 தொகுதிகளின் பெயர் கொண்ட விருப்ப பட்டியலை வழங்கினர்.
ம.நீ.ம., கட்சி கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்தது. அதற்கு பரிசாக, கமலுக்கு ராஜ்யசபா 'சீட்' வழங்கப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில், முதல் முறையாக தி.மு.க., கூட்டணியில் ம.நீ.ம., போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு வேளச்சேரி, கோவை தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 'டார்ச் லைட்' சின்னத்தை, ம.நீ.ம., கட்சிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது. எனவே, அக்கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, அருணாசலம் அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ம.நீ.ம., எவ்வாறு பலம் சேர்க்கும் என்ற தரவுகளை கொடுத்தோம். அதை, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக தொகுதி பங்கீடு பேச்சு குழுவினர் தெரிவித்தனர். கோழி முட்டையை அடை காப்பது போல் காத்து, குஞ்சு பொரித்த பின், எத்தனை தொகுதிகள் என்பதை சொல்கிறோம்; அதுவரை அமைதி காக்கவும். போட்டியிடும் சின்னம் டார்ச் லைட்டா, உதயசூரியனா என்பது குறித்து, கட்சித் தலைவர் கமல் ஆலோசனையின்படி முடிவெடுக்கப்படும். தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

