து.பொ.செ., பதவியை எதிர்பார்க்கும் உதயநிதி; பொதுக்குழு ஏமாற்றத்தால் கடும் அதிருப்தி
து.பொ.செ., பதவியை எதிர்பார்க்கும் உதயநிதி; பொதுக்குழு ஏமாற்றத்தால் கடும் அதிருப்தி
ADDED : ஜூன் 07, 2025 02:21 AM

தி.மு.க., பொதுக் குழுவில், துணை முதல்வர் உதயநிதிக்கு துணை பொதுச்செயலர் பதவி வழங்காததால், அவர் ஏமாற்றம் அடைந்து, கட்சி தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் உதயநிதி பிரசாரம் செய்தார். அத்தேர்தலில், 38 இடங்களில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது.
தீவிர பிரசாரம்
தேர்தல் வெற்றிக்கு உழைத்ததற்காக, உதயநிதிக்கு தி.மு.க., இளைஞரணி செயலர் பதவி பரிசாக வழங்கப்பட்டது.இதை தொடர்ந்து, கடந்த 2021 சட்டசபை தேர்தலில், சேப்பாக்கம்- - திருவல்லிக்கேணி தொகுதியில், அவர் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவருக்கு துணை முதல்வர் அல்லது உள்ளாட்சி துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், சனாதனம் குறித்து உதயநிதி பேசிய பேச்சால், தி.மு.க., கூட்டணி பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க., கூட்டணி, 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
லோக்சபா தேர்தலிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டதற்காக, அவருக்கு துணை முதல்வர் பதவி பரிசாக வழங்கப்பட்டது. அப்பதவி வழங்கிய பின், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, அவருக்குரிய மரியாதை கிடைத்து விடுகிறது.
ஆனால், கட்சி நிகழ்ச்சி கள், மாவட்டச் செயலர்கள் கூட்டம், உயர்மட்ட செயல் திட்டக்குழு, செயற்குழு போன்ற கூட்டங்களில், உதயநிதிக்கு மேடையில் இடம் கிடைப்பதில்லை; மேடையின் கீழே, முன்வரிசையில் தான் அமர்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதால், துணை பொதுச்செயலர் அல்லது செயல் தலைவர் பதவி கிடைக்கும்பட்சத்தில், மேடையில் மாநில நிர்வாகிகளுடன் அமர்ந்து கொள்ளலாம் என உதயநிதி கருதுவதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மதுரையில் நடந்த பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால், உதயநிதிக்கு அப்பொறுப்பு வழங்கப்படவில்லை.
செயல் தலைவர்
இதனால், அவர் ஏமாற்றம் அடைந்தார். அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அடுத்த ஆண்டு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, உதயநிதிக்கு நெருக்கமான நிர்வாகிகள் கூறியதாவது:
பொன்முடியிடம் இருந்த துணை பொதுச்செயலர் பதவி உதயநிதிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்பதவி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தேர்தல் பணிக் குழு ஒருங்கிணைப்பாளராக உதயநிதி இருக்கிறார். எனவே, அவரது எதிர்பார்ப்பு, செயல் தலைவர் அல்லது பொருளாளர் போன்ற பெரும் பதவியாகத்தான் இருக்கிறது.
ஆனால், இப்போதைக்கு துணை பொதுச்செயலர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், பொதுக்குழு வாயிலாக அது கிடைக்கவில்லை என்றதும் அதிருப்தியாகி விட்டார்.
துணை முதல்வர் பதவி கொடுத்த கையோடு, துணை பொதுச்செயலர் பதவியையும் கொடுத்தால், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதால், உதயநிதி விரும்பியதை தலைமை செய்யவில்லை.
ஆனாலும், வரும் சட்டசபை தேர்தலில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்திற்கு பதிலடி தரும் வகையில், உதயநிதி சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்.
அதன் வாயிலாக, மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்கும் பட்சத்தில், உதயநிதிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் தான் பொதுக்குழுவில், உதயநிதியின் பணி தொடர துணை நிற்போம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், உதயநிதிக்கு கட்சி தலைமை மீது கடும் அதிருப்தி உள்ளது. அதனாலேயே, இந்த விஷயத்தில் அவர் தலைமையோடு மல்லுகட்டுவதாக தகவல்கள் வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -