பராமரிப்பற்ற தொல்லியல் சின்னங்கள்: பாதுகாப்பின்றி பாழாகி வரும் அவலம்
பராமரிப்பற்ற தொல்லியல் சின்னங்கள்: பாதுகாப்பின்றி பாழாகி வரும் அவலம்
ADDED : நவ 09, 2025 12:34 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தொல்லியல் சின்னங்கள் பராமரிப்பின்றி, பாதுகாப்பு நடவடிக்கை இல்லாததால் பாழாகி வருகின்றன.
மாவட்டத்தை பொறுத்தமட்டில், கொடைக்கானல், தாண்டிக்குடி, பன்றிமலை, ஆடலுார், பாச்சலுார், பேத்துப்பாறை, அடுக்கம், மன்னவனுார், கே.சி.பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம், பழனி, சிறுமலை, கன்னிவாடி, வடமதுரை, குஜிலியம்பாறை, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் உள்ளன. தொன்மை வாய்ந்த இந்த தொல்லியல் சின்னங்களை ஆய்வாளர்கள் அடை யாளப்படுத்தியுள்ளனர்.
இவை அடையாளப்படுத்தப்பட்ட கையுடன், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்பு பதாகை மட்டுமே ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன.
அவற்றின் பழமையை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தொல்லியல் சின்னங்கள் சிதிலம் அடைந்து வருகின்றன.
ஆதி மனிதர்கள் வாழ்ந்த எச்சங்கள், பாறை ஓவியங்கள், முதுமக்கள் தாழி, கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், கற்திட்டுகள், வணிகம் சார்ந்த கல்வெட்டுகள், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் ஏராளமாக உள்ளன.
இவற்றை தொல்லியல் துறையினர் பராமரிக்காததால் பாழாகி வருகின்றன . இவற்றை பாதுகாப்பதுடன் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் தொல்லியல் சின்னங்கள் அடங்கிய சுற்றுலாவையும் அறிமுகப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

