இந்தியா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமெரிக்க அறிக்கை
இந்தியா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமெரிக்க அறிக்கை
ADDED : ஏப் 02, 2025 05:46 AM

வாஷிங்டன் : அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் -பொருட்களுக்கு, இந்தியா அதிக வரி விதிப்பதுடன் மட்டுமல்லாது, வேறு சில வகைகளிலும் தடைவிதிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. இந்த முறை இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது டிரம்ப் அல்ல, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு. அது நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
யு.எஸ்.டி.ஆர்., என்றழைக்கப்படும் இந்த அமைப்பு, ஆண்டு தோறும் வெளியிடப்படும் தேசிய வர்த்தக மதிப்பீட்டு அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை அதிபர் டிரம்ப் இன்று வெளியிடவுள்ள நிலையில், இதற்கு முன்னதாக, இந்த அறிக்கை வெளிவந்து அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
அறிக்கையின் முக்கிய விபரங்கள்:
* இந்தியாவில், சமையல் எண்ணெய் மீது 45 சதவீதம்; ஆப்பிள், மக்காச்சோளம், மோட்டார் சைக்கிள் மீது 50 சதவீதம்; வாகனம், பூக்கள் மீது 60 சதவீதம்; இயற்கை ரப்பர் மீது 70 சதவீதம்; காபி, திராட்சைப்பழம், வால்நட்ஸ் மீது 100 சதவீதம்; மற்றும் மதுபானங்கள் மீது 150 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது
* அதிக வரி விதிப்பின் காரணமாக, அமெரிக்க நிறுவனங்களால், இந்தியாவின் வேளாண் உற்பத்தி பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் சந்தையில் நுழைய முடியவில்லை
* உலகிலேயே இந்தியாவில் தான் விவசாயப் பொருட்கள் இறக்குமதிக்கு, உலக வர்த்தக அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு, மிக அதிக வரி வசூலிக்கப்படுகிறது. சராசரியாக 113 சதவீதமும், அதிகபட்சமாக 300 சதவீதம் வரையிலும் வரி விதிக்கப்படுகிறது
* இந்தியாவில், உலக வர்த்தக அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வரி சதவீதத்துக்கும், வசூலிக்கப்படும் வரி சதவீதத்துக்கும் எப்போதுமே பெரிய வித்தியாசம் உள்ளது. இதன் காரணமாக, விருப்பத்துக்கு ஏற்ப, எப்போது வேண்டுமானாலும் விவசாய மற்றும் பிற பொருட்களின் மீது இறக்குமதி வரி மாற்றியமைக்கப்படுகிறது. இந்த நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, அமெரிக்க பணியாளர்கள், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் என, அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்
* உலகிலேயே மிகப்பெரிய பால்பொருட்கள் சந்தையை கொண்டுள்ள இந்தியா, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதிப்பதால், அமெரிக்க நிறுவனங்களால் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை
* உலக வர்த்தக அமைப்பால், 'உயிர் காக்கும் மருந்துகள்' என வகைப்படுத்தப்பட்டுள்ள மருந்து பொருட்களின் மீதும் அதிக சுங்க வரி வசூலிக்கப்படுகிறது
* அதிக வரி மட்டுமின்றி; இறக்குமதி தடை, உரிமம் பெறும் நடைமுறை, கட்டாய தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் உள்நாட்டு சோதனை, சான்றிதழ் தேவை, விலை கட்டுப்பாடு என பல்வேறு வழிகளில் அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கு தடைக் கற்களை போடுகிறது. ஆண்டு தோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில், இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அவை உடனடியாக அமலுக்கும் கொண்டு வரப்படுகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை
* இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமைக்கான காப்புரிமை நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு மற்றும் கண்டுபிடிப்பு இலக்குகளை பாதிக்கிறது
* சேவைகள் துறையைப் பொறுத்தவரை, முக்கிய பிரிவுகளான நிதி, தொழில்முறை மற்றும் சில்லரை பிரிவுகளில் அன்னிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் வெளிநாட்டு டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் மின்னணு பேமென்ட் சேவை நிறுவனங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியா மீது குற்றம்சாட்டப்பட்டு அறிக்கை வெளியாகி உள்ளது.