வாகன விபத்துகளை தவிர்க்க வருகிறது 'வி2வி' தொழில்நுட்பம்
வாகன விபத்துகளை தவிர்க்க வருகிறது 'வி2வி' தொழில்நுட்பம்
UPDATED : ஜன 10, 2026 06:06 AM
ADDED : ஜன 10, 2026 05:26 AM

புதுடில்லி: சாலைகளில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, 'வி2வி' எனப்படும், 'வெஹிக்கல் டூ வெஹிக்கல்' என்ற புதிய தொழில்நுட்பத்தை, இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தொடர்கதை
கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, பிற வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, அடர்ந்த பனிக்காலத்தில், முன்னால் செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு புலப்படாததால், வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்குவதும் தொடர்கதையாக உள்ளன.
இந்த விபத்துகளை தவிர்ப்பது தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
டில்லியில் சமீபத்தில் நடந்த மாநில சாலை போக்குவரத்து துறை அமைச்சர்கள் கூட்டத்திலும் இதுபோன்ற விபத்துகளை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், பங்கேற்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்நிதின் கட்கரி, வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் இடையிலான தொடர்பு சாதனம் வாயிலாக, இந்த விபத்துகளை தடுக்கலாம் என்ற கருத்தை தெரிவித்தார்.
ரூ. 5,000 கோடி செலவு
கூட்டத்துக்கு பின், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: சமீபத்தில் நடந்த ஆறு பெரிய விபத்துகளில் சிக்கிய பஸ்களின் உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்துகளில் மட்டும் 135 பேர் பலியாகினர்.
வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க, வெளிநாடுகளில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதை தடுக்க பின்பற்றப்படும், 'வி2வி' எனப்படும் 'வெஹிக்கல் டூ வெஹிக்கல்' தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள், இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையை பயன்படுத்துவதால், சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்களில் பிற வாகனங்கள் மோதுவது தவிர்க்கப்படும்.
அடர் பனி காலங்களில், சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாவதும் தடுக்கப்படும். இந்த முறை தற்போது, ஒரு சில நாடுகளில் மட்டுமே அமலில் உள்ளது. இந்த திட்டத்துக்கு 5,000 கோடி ரூபாய் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

