கோவில்பட்டியில் வைகோ போட்டி? தனி சின்னத்தில் களமிறங்குகிறார்!
கோவில்பட்டியில் வைகோ போட்டி? தனி சின்னத்தில் களமிறங்குகிறார்!
ADDED : மார் 13, 2026 06:46 AM

- நமது நிருபர் -
தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பதவி எதிர்பார்த்து கிடைக்காததால், சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தமாகி உள்ளது.
இந்நிலையில், கோவில்பட்டி தொகுதியில் தனி சின்னத்தில் வைகோ போட்டியிட வேண்டும் என கட்சியினரும், நாயுடு சமூகத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.
ம.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தேர்தல் செலவையும் தி.மு.க., ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, எங்களுக்கு அதிருப்தி இல்லை. மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும், இரு முறை லோக்சபா எம்.பி.,யாகவும் வைகோ இருந்துள்ளார்.
கடந்த 1996 சட்டசபை தேர்தலில், விளாத்தி குளத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பின், சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. 2021 தேர்தலில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், கடைசி நேரத்தில் போட்டியிடுவதை தவிர்த்தார்.
தற்போது ராஜ்யசபா எம்.பி., பதவியை எதிர்பார்த்தார்; கிடைக்கவில்லை. இந்நிலையில், சட்டசபையிலும் அவரது குரல் ஒலிக்க வேண்டும் என ம.தி.மு.க.,வினர் விரும்புகின்றனர். கோவில்பட்டியில் உள்ள நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களும், வைகோ போட்டியிட வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

