10 நாளில் வன்னியர் இட ஒதுக்கீடு; அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
10 நாளில் வன்னியர் இட ஒதுக்கீடு; அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
ADDED : ஜூலை 03, 2025 03:14 AM

சென்னை: 'தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, இனியும் கால நீட்டிப்பு வழங்காமல், அடுத்த 10 நாட்களில், வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, அரசுக்கு பரிந்துரைக்க, தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்ட காலக்கெடு, வரும் 11ம் தேதியுடன் முடிகிறது.
வெறும் மூன்று மாதங்கள் வழங்கப்பட்ட காலக்கெடு, 30 மாதங்களாக நீட்டிக்கப்பட்டும் கூட, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க, ஓர் அடியைக்கூட தி.மு.க., அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் எடுத்து வைக்கவில்லை. பா.ம.க., நிறுவனர் ராமதாசும், நானும் முதல்வர் ஸ்டாலினுக்கு பலமுறை கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் பலனில்லை.
இவ்வளவுக்குப் பிறகும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க, தி.மு.க., அரசு மறுக்கிறது என்றால், அது வன்னியர்களுக்கு எதிராக எவ்வளவு வன்மங்களையும், வஞ்சனைகளையும் சுமந்து கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும்.
சமூக நீதிக்கு எதிரான இந்த பாவச் செயலுக்கு, தி.மு.க., அரசு பரிகாரம் தேடுவதற்கான தருணம் வந்து விட்டது.
வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்கான ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை இனியும் நீட்டிக்கக்கூடாது. ஆணையத்திடமிருந்து அடுத்த 10 நாள்களுக்குள் பரிந்துரை அறிக்கையை அரசு பெற வேண்டும். அதனடிப்படையில், சட்டசபை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.